
ராகுல்காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் இந்த வழக்கில் நீதிபதி முறையாக விசாரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ராகுல் காந்திக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை உரிய முறையில் விசாரித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.