
மனைவி துன்புறுத்தால் செய்ததாகக் கூறி ஐ.டி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் மனவ் சர்மா. இவர் தனியார் ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி மனவ் சர்மா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மனவ் சர்ம அழுது கொண்டே கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், தனது மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பதாகவும், சட்டங்கள் ஆண்களைப் பாதுகாக்கவில்லை என்றால் குற்றம் சாட்டப்படுவதற்கு எந்த மனிதனும் இருக்க மாட்டான் என்றும், தான் இறந்த பிறகு தனது பெற்றோரை சீண்ட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மனவ் சர்மாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனின் மரணத்திற்கு தனது மருமகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இருப்பினும், சர்மாவின் மனைவி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘என்னுடைய கணவர் அதிகமாக குடிப்பார், பல முறை தற்கொலைக்கு முயன்றார். நான் அவரை மூன்று முறை காப்பாற்றினேன். குடித்துவிட்டு அவர் என்னைத் தாக்கினார். நான் என் மாமியாரிடம் பல முறை தெரிவித்திருந்தேன், ஆனால் அவர்கள் என்னை புறக்கணித்தனர். திருமணத்திற்கு முன்பு அந்த உறவு இருந்தது. ஆனால், நான் அவரை மணந்த பிறகு எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், மனவ் சர்மாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு, தனது மனைவியும், மனைவியினுடைய குடும்பத்தினரும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக பெங்களூர் ஐ.டி ஊழியரான அதுல் சுபாஷ் வீடியோ ஒன்றை பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.