Skip to main content

குஜராத் முதல்வரை கலங்கவைத்த நிலக்கடலை ஊழல்!

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

குஜராத்தில் விவசாயிகளிடமிருந்து நிலக்கடலையை வாங்கி இருப்புவைத்ததில் ஊழல் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் காவல்துறை இதுவரை 30 நபர்களைக் கைதுசெய்துள்ளது. இதில் பா.ஜ. பிரமுகர்களும் கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களும் அடக்கமென தெரியவந்துள்ளது.

Nut

 

 

குஜராத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைதந்து விவசாயிகளிடமிருந்து ரூ 4000 கோடி அளவுக்கு நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில்தான் நிதி முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தரம்குறைந்த நிலக்கடலை கொள்முதல், கொள்முதல் செய்த நிலக்கடலையில் மணல், சேறு, கற்களைக் கலப்படம் செய்தல், கலப்படம் செய்தது வெளிப்படாமலிருக்க, அவை இருப்பு வைக்கப்பட்டுள்ள கிட்டங்கிகளுக்குத் தீவைப்பது என பல்வேறு உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

 

 

கடந்த சில மாதங்களில் மட்டும், நிலக்கடலை இருப்பு வைக்கப்பட்ட வெவ்வேறு இடங்களில் நான்கு தீவிபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகள், நிலக்கடலையில் செய்த கலப்படம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்விபத்துகளில் கிட்டத்தட்ட 51 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

ராஜ்கோட் மாவட்டம் பேதா கிராமத்தைச் சேர்ந்த தனியார் சேமிப்புக் கிடங்கொன்றில் இருப்புவைக்கப்பட்டிருந்த நிலக்கடலை மூட்டைகளில் அளவுக்கதிகமாக மணலும் சிறு கற்களும் இருந்ததை அறியவந்த, அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது இந்த ஊழல் வெளிப்பட்டிருக்கிறது.

 

 

கிட்டத்தட்ட ஒவ்வொரு மூடையிலும் 10 கிலோ நிலக்கடலையைப் பிரித்தெடுத்துவிட்டு, அதற்குப்பதில் அதேயளவு மணல் அல்லது கற்களை கலப்படம் செய்திருக்கிறார்கள். பிரித்தெடுத்த கடலையை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார்கள் என ஊழல் நடந்த விதம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் குஜராத்தின் முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் சிமான் சபாரியா சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதேசமயம் அடிப்படை கட்சி ஊழியர்களும், கீழ்நிலை கூட்டுறவுத் துறை ஊழியர்களும் சம்பந்தப்படுத்தப்பட்டு பெருந்தலைகள் தப்பிக்க வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நிலக்கடலை ஊழல் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியைக் கவலையடையச் செய்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.