Skip to main content

நாடாளுமன்றத்தை நோக்கிய ட்ராக்டர் பேரணி ஒத்திவைப்பு - விவசாயிகள் அறிவிப்பு!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

 

இந்தநிலையில் நவம்பர் 19 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலை, எங்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, காற்று தர மேலாண்மை ஆணைய அவசரச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது, இறந்த எங்களின் நண்பர்களுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது ஆகிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர்.

 

மேலும் திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ட்ராக்டர் பேரணியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறு மாநிலங்களையும், ரயில்வேவையும் பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை, போராட்டத்தில் இறந்த விவசாயிகள், லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

 

டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில்,  தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.