
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமைப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றது.
இந்நிலையில் பெங்களூருவில் கரோனா பாதித்தவர்களின் வீட்டைத் தகரம் வைத்து ஊழியர்கள் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் ஒரு தாய் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் வசித்து வருகிறார்கள். அவரது வீட்டிற்கு அருகில் வயதான தம்பதிகள் இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அவர்கள் வெளியே சென்றுவிடாமல் இருக்க தகரத்தைக் கொண்டு அவர்களது வீட்டை மூடியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அந்தத் தகரத்தை எடுத்தது மட்டுமில்லாமல் தவறுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளனர்.