8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மூன்று ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தந்தையின் பாலியல் துன்புறுத்தலால் தான் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறுமியின் தாய் வழி தாத்தா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். மறுபுறம், அந்த தாத்தா மீது சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கணவன் மீது குடும்ப வன்முறை வழக்குப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கணவர் வீட்டிலே வசிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்தார். அதில் தாய்வழி தாத்தா, தன்னையும் சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியின் தாய் வழி தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கொட்டாரக்கரா விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீரா பிர்லா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாத்தா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.