Skip to main content

புதுவை தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிடியாணை!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

Court issues arrest to Puducherry Chief Secretary

 

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (குடிநீர் விநியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை) நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வரை இலாபத்தில் இயங்கியது. அந்நிறுவனத்திற்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை. அதையடுத்து பாசிக் நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 14.07.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 3 மாதங்களுக்குள் பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை.

 

இதற்கிடையே வழக்கு தொடுத்த 48 பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்கள், 'சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச் செயலாளர் ரவி பிரகாஷ்,  இயக்குனர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'புதுச்சேரி தலைமைச் செயலாளர் அசோக்குமார்,  துறைச் செயலாளர் ரவி பிரகாஷ், வேளாண் இயக்குநர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் டிசம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வேளாண் இயக்குநர் பாலகாந்தி, மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மட்டுமே நேரில் ஆஜராகினர். தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச்செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து நேரில் ஆஜராகாத தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

தலைமை செயலாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.