உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தெலுங்கானா மாநிலத்தை பொறுத்த வரையில், இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் கரோனா வைரஸின் தோற்றத்தை போன்றே கார் ஒன்றை உருவாக்கி சாலைகளில் ஓட்டிச்செல்கிறார். ஒலி பெருக்கி மூலம் கரோனாவின் தீவிரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியும் வருகிறார். இளைஞரின் இந்த நடவடிக்கையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.