Skip to main content

அம்பானிக்கு கைமாறும் மத்திய அரசின் அசோகா ஹோட்டல்

Published on 24/11/2022 | Edited on 25/11/2022

 - தெ.சு.கவுதமன்

 

Central government's Ashoka Hotel to be handed over to Ambani

 

பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள, டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக ரூ.7,409 கோடி ரூபாயை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மேலும் 7 ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

டெல்லியில் ஒரு 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலை வாங்க வேண்டுமென்ற ஆசை முகேஷ் அம்பானிக்கு பல காலமாக இருந்திருக்கிறது. இவர் சமீபத்தில் முதலீடு செய்த ஓபராய் குழுமத்தின் ஹோட்டலை முழுமையாக இவரால் கையகப்படுத்த முடியவில்லை. இச்சூழலில், டெல்லியில் விற்பனை செய்யப்படவுள்ள அசோக் ஹோட்டலை முகேஷ் அம்பானியே வாங்குவாரென்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. வாஜ்பாய் காலத்திலேயே இந்த ஹோட்டல் விற்பனைக்கு வருவதாக இருந்த சூழலில், அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான ஜக்மோகன், 'எந்த ஒரு லாபம் ஈட்டும் அரசு நிறுவனத்தையும் விற்க மாட்டோம்' என்ற வாஜ்பாய் அரசின் கொள்கை முடிவைக் காரணம் காட்டி விற்பனையைத் தடுத்துவிட்டார்.

 

பிரதமர் மோடியின் ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களை விற்று காசாக்குவதிலும் 99 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விட்டு காசாக்குவதிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த அக்கறை காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பொதுத்துறை நிறுவனம் லாபமீட்டுகிறதோ இல்லையோ, விற்பனை செய்வதாக முடிவெடுத்தால் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பாரத் எர்த் மூவர் லிமிடெட் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கியபோதும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டன.

 

கடந்த 2021, ஆகஸ்ட்  மாதத்தில் நடைபெற்ற தேசிய பணமாக்கல் செயல்முறை (NMP) கூட்டத்தில், அடுத்த நான்காண்டு காலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் மற்றும் துறைமுகங்களை தனியாருக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

 

அதன்படி பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள் பலவற்றையும் அதானி குழுமத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விடும் பணி முடுக்கி விடப்பட்டது. துறைமுகங்களையும் அதானி குழுமம் குத்தகைக்கு வாங்கியது. நீண்டகாலக் குத்தகைக்கு வாங்குவது என்பதே விற்கப்படுவதற்கு சமமெனக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம், ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு 2022-23 ஆண்டில், இதுவரை 33,422 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்களைக் காசாக்கியுள்ளது. இதில், நிலக்கரி அமைச்சகத்தின் சுரங்கங்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டுமே 17,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அடுத்ததாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்கள் விற்பனைக்கு நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளன. இப்படி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்குமாக விற்றுக்கொண்டே சென்றால் பாராளுமன்றம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.