உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிப்பதும், மாஸ்க் அணிவதும்தான் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்பதால், அதை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால் தங்களுக்கெல்லாம் கரோனா தொற்று ஏற்படாது எனச்சொல்லி அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி 30 சதவித மக்கள் வெளியே சுற்றிவந்தனர். இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கைகளை கடுமைப்படுத்தின. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.