Skip to main content

அவுரங்கசீப் படத்தைப் பதிவிட்டவர் மீது வழக்கு!

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

case filed against aurangzeb picture upload on social media

 

மஹாராஷ்டிராவில் உள்ள சில நகரங்களில் அவுரங்கசீப், திப்பு சுல்தான் உள்ளிட்ட தலைவர்கள் குறித்த பேச்சுகள் மூலம் சமீபத்தில் வன்முறைகள் நடைபெற்றன. இந்த கலவரத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மேலும் பலரும் காயமடைந்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் கலவரங்கள் தீவிரமடையாமல் இருக்கவும், அமைதியான சூழல் திரும்பவும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

 

இந்த கலவரம் தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘மஹாராஷ்டிராவில் திடீரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறந்துள்ளனர்' எனக் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜகவினர் காந்தியை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள்" என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "கோட்சே மகாத்மா காந்தியை கொன்றவர் என்றால் அவரும் இந்தியாவின் மதிப்புமிக்க மகன் தான்" என சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் நவி மும்பையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தின் முகப்பு படமாக முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படத்தை பதிவிட்டார். இதற்கு மற்றொரு தரப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து அவுரங்கசீப் புகைப்படத்தைப் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இவர் போலீஸ் பிடியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்