Skip to main content

பட்டியல் சமூக பஞ்சாயத்து தலைவரை மேடையில் அனுமதிக்க மறுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ; ஆந்திராவில் சர்ச்சை!

Published on 20/06/2025 | Edited on 20/06/2025

 

BJP MLA refuses allow dalit Panchayat leader on stage Andhra Pradesh

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரை, பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் மேடையில் அனுமதிக்க மறுத்த சம்பவம் ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ.க எம்.எல்.ஏவாக பிவி பார்த்தசாரதி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி குர்ணூல் மாவட்டத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவினர், தெலுங்கு தேசம் கட்சியினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் நின்று கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ பிவி பார்த்தசாரதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பா.ஜ.க பஞ்சாயத்து தலைவரை நோக்கி, ‘ஏய் பஞ்சாயத்து தலைவரே, நீங்களும் இங்கே வந்திருக்கீங்க. ஏன் அங்கேயே நிற்கிறீங்க? இங்கே வாங்க’ என்று அவரை அழைத்தார். ஆனால், அந்த பஞ்சாயத்து மேடைக்கு வர தயங்கியுள்ளார். உடனே பிவி பார்த்தசாரதி, ‘அவர் ஏன் தயங்குகிறார்? அவர் கிறிஸ்துவரா? என்று பக்கத்தில் இருப்பவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்கு அருகில் நின்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஒருவர், ‘அவர் ஒரு எஸ்சி (பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்) சார்’ என்று பதிலளித்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ பிவி பார்த்தசாரதி, ‘சரி இங்கே பக்கத்தில் வந்து நில்லுங்கள்’ என்று கூறி அவரை மேடைக்கு கீழே நிற்க வைத்தார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதி ரீதியாக ஒரு தலைவரை அவமானப்படுத்தியுள்ளதாகவும், பா.ஜ.க எம்.எல்.ஏவின் உடல் மொழி மற்றும் சைகைகள் மிகவும் அவமரியாதைக்குரியவை எனவும் கூறி பலரும் பிவி பார்த்தசாரதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்