
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த வருடம் ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் செம்பியம் காவல்துறையினர் வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'என்னுடைய சகோதரர் ஆம்ஸ்ட்ராங் தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தார். அவருடைய கொலை வழக்கில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்து வருகிறது. எனவே மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. ஒருதலைபட்சமாக விசாரிப்பார்கள் என்ற ஐயம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக தலைமறைவாக உள்ளனர். வெளிநாட்டில் உள்ள அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை முழுமையான முயற்சி எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை பொறுத்தவரை மாநில காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. எனவே சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.