
மனைவி மீது கொண்ட தீராத காதலால் சேமித்து வைத்த ரூ.1,120ஐ எடுத்துக் கொண்டு தாலி வாங்க வந்த 93 வயது முதியவரிடம் வெறும் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு தாலி வழங்கிய நகை கடை உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே (93). எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, சாந்தாபாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனாலும், அவர்கள் தங்களைத் தானே கவனித்துக்கொள்கிறார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் ஆதரவளித்து தீராத காதலோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆஷாதி ஏகாதசி ஜூலை 6ஆம் தேதி கொண்டாடப்படுவதால் வயதான தம்பதியான இவர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து பந்தர்பூருக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தனது மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க வேண்டும் என்று நிவ்ருத்தி ஷிண்டே ஆசைப்பட்டுள்ளார். அதன்படி, சத்ரபதி சம்பாஜிநகரில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்குள் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். வெள்ளை வேட்டி, தொப்பி அணிந்து எளிமையான தோற்றத்துடன் நிவ்ருத்தி கடைக்குள் வந்ததை பார்த்த கடை ஊழியர்கள், அவர் யாசகம் கேட்டு வந்ததாகக் கருதியுள்ளனர்.
ஆனால், தன்னுடன் வந்த மனைவிக்கு ஒரு தாலி வாங்க வேண்டும் என்று நிவ்ருத்தி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கேட்ட கடை கடை ஊழியர்கள் வியந்து, எவ்வளவு பவுனில் எத்தனை ரூபாயில் நகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த முதியவர், தான் சேமித்து வைத்த ரூ.1,120இல் தங்க தாலி வேண்டும் என்று அப்பாவித்தனமாக கேட்டுள்ளார். தற்போதைய உலகில் நகையின் விலையை அறியாத முதியவரின் வெகுளித்தனத்தையும், தனது மனைவி மீது கொண்ட அன்பையும் அங்கிருந்த கடை உரிமையாளர் பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். மனைவி மீது கொண்ட ஆழமான அன்பால் ஈர்க்கப்பட்ட கடை உரிமையாளர், அந்த முதியவரிடம் இருந்து வெறும் ரூ.20ஐ மட்டும் பெற்றுக்கொண்டு தங்க தாலியை பரிசாகக் கொடுத்தார். நகையை வாங்க வயதான தம்பதி இருவரும், ஆனந்த கண்ணீர் விட்டனர்.
இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், ‘அந்தத் தம்பதியினர் கடைக்குள் நுழைந்தபோது, அந்த நபர் தனது மனைவிக்கு ஒரு தாலி வாங்க விரும்புவதாகக் கூறி ரூ.1,120 கொடுத்தார். மனைவி மீது கொண்ட அவரது அன்பு என்னை மிகவும் ஈர்த்தது. நான் அவரிடமிருந்து ரூ.20 ஐ ஆசிர்வாதமாக வாங்கி, தாலியை அந்தத் தம்பதியினரிடம் கொடுத்தேன்’ என்று கூறினார். இந்த உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதியவரின் காதலையும், அந்த காதலால் ஈர்க்கப்பட்டு கடை உரிமையாளரின் செயலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.