
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி. சசி தரூரின் மீது சொந்த கட்சியினர் சிலரே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவில் இருந்து விலகிய பிறகு அந்த பதவிக்கான போட்டி நிலவியது. அதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவுடன் மல்லிகார்ஜுன கார்கேவும், அவரை எதிர்த்து சசி தரூரும் போட்டியிட்டனர். பின்னாளில் கார்கேவே தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இருந்தே கட்சியினர் சிலருக்கு சசி தரூரின் மீது அதிருப்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அதிகரிக்கும் வகையில் சசிதரூரின் அண்மைக் கால நடவடிக்கை இருப்பதாக அக்கட்சியினரே கருதுகின்றனர்.
அண்மைக் காலமாகவே சசிதரூர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார். அத்துடன் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க சசிதரூருக்கு மத்திய அரசு கொடுத்த முக்கியத்துவம் பேசுபொருளானது. அதில் இருந்து சசிதரூரின் நடவடிக்கை முற்றிலும் மாறியிருப்பதாகவும், தலைமையின் உத்தரவை மீறி பிரதமர் மோடியை புகழ்வதாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். அத்தோடு கேரள காங்கிரஸ் நிர்வாகிகளே சசிதரூரை கடுமையாக சாடியுள்ளனர்.
இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர், “காங்கிரஸ் தொண்டர்களுடன் 16 வருடம் இணைந்து பணியாற்றி உள்ளேன். 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர்கள் பெரிதும் உதவி செய்திருக்கின்றனர். அவர்கள் எனக்கு நண்பர்களாக, உறவினர்களாக இருந்திருக்கின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது” என்றார்.
கேரள மாநிலம் நிலாம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சசிதரூர் வராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மத்திய அரசு அமைத்த குழுவின் மூலம் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க வெளிநாடுகளுக்கு சென்றே. ஆனால், திரும்பி வந்தவுடன் யாரும் என்னை பிரச்சாரம் செய்ய அழைக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை” என்றார். மேலும், நான் எந்த கட்சிக்கும் சொல்லப்போவதில்லை. காங்கிரஸ் உறுப்பினராகவே இருப்பேன். இதுகுறித்து காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.