Skip to main content

"மத்திய அரசின் அறிவுறுத்தலால் தடுப்பூசி தர மறுக்கும் பாரத் பயோடெக்" - டெல்லி அரசு குற்றச்சாட்டு!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021
manish sisodiya

 

கரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஓரே தீர்வாகக் கருதப்படுகிறது. இதற்காக, மக்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மே ஒன்றாம் தேதி முதல் 18 - 44 வயதுள்ளோருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தும், பல மாநிலங்களில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்படவில்லை.

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தவே போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது அம்மாநில அரசு. அதேபோல, டெல்லியிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசின் உத்தரவால்தான் டெல்லிக்குத் தடுப்பூசிகளை வழங்கவில்லை என டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கூடுதல் தடுப்பூசி கோரிய டெல்லி அரசின் கடிதத்திற்கு, பாரத் பயோடெக் எழுதியுள்ள பதில் கடிதத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனிஷ் சிசோடியா. அவர் பதிவிட்டுள்ள அந்த  கடிதத்தில், "ஒவ்வொரு மாதமும் (தடுப்பூசி) உற்பத்தியை  அதிகரித்து வந்தாலும், எங்களால் தேவைக்கு ஏற்ற அளவு தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நாங்கள் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறோம். எனவே, நீங்கள் கோரியபடி கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாததற்காக வருந்துகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு தவறாக நிர்வகிக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலையும், தயாரிப்பு அளவு குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி பாரத் பயோடெக் நிறுவனம் டெல்லிக்குத் தடுப்பூசி வழங்க மறுக்கிறது. 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது தவறு என மீண்டும் ஒருமுறை நான் கூறுவேன். தடுப்பூசி வராததால், 17 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 100 கோவாக்சின் தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்" எனக்  கூறியுள்ளார் மனிஷ் சிசோடியா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.