
அனைத்து லாரி ஒட்டுநர்களின் வசதிக்காகக் குளிர்சாதனப் பெட்டி அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதைத் தொடர்ந்து அதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து லாரி ஓட்டுநர்களின் வசதிக்காக லாரியிலுள்ள கேபின்களில் குளிர்சாதனப் பெட்டி அமைப்பதாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறியிருந்தார். இதற்கு லாரி ஓட்டுநர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அதிகமான லாரிகள் பழைய என்ஜின்கள் கொண்டவை. இதனிடையே, பழைய என்ஜின் கொண்ட லாரிகளுக்கு கேபின்கள் திறந்த வெளியில் தான் இருக்கும். அதனால், லாரிகளுக்கு குளிர்சாதனப் பெட்டி அமைப்பதற்கு முன்னால் அந்த கேபின்களை மாற்றி புதிதாக ஒரு கேபினை அமைக்க வேண்டியிருக்கும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஒரு லாரியின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் 1,00,000 வரை அதிகமாகலாம். மேலும், குளிர் சாதன வசதி அமைத்தால் லாரிகளுக்கு டீசலின் தேவை அதிகமாக பிடிக்கும். இதனால் லாரி ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், மத்திய அரசிடம் இருந்து இத்திட்டத்தைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.