Skip to main content

சர்ச்சையைக் கிளப்பிய புஷ்பா பட வசனம்; ஆந்திரா அரசியலில் சலசலப்பு!

Published on 20/06/2025 | Edited on 20/06/2025

 

Pushpa film controversial dialogue stirs up Andhra Pradesh politics

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா – தி ரைஸ்’ என்ற படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் பிரபலமான வசனம் ஒன்று தற்போது ஆந்திரா அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பொதுப் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேரணியின் போது அக்கட்சியின் தொண்டர் ஒருவர், உள்ளூர் கங்கம்மா ஜாதரா சடங்கின் படங்களைப் பயன்படுத்தி புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ‘ரப்ப ரப்ப நருகுதம்’ (தலைகளை ஒவ்வொன்றாக வெட்டுவோம்) என்ற வசனம் கொண்ட பதாகையை ஏந்தியபடி இருந்துள்ளார். அந்த தொண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Pushpa film controversial dialogue stirs up Andhra Pradesh politics

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது மக்கள் அவ்வளவு கோபமாக இருக்கிறார்கள். அவர் அவர்களைத் தோல்வியடையச் செய்து, துரோகம் செய்துவிட்டார் என்று அவர் சொல்ல வந்தார். இது ஜனநாயகமா இல்லையா, திரைப்பட வசனங்களைக்கூட நாங்கள் பயன்படுத்த முடியாதா? புஷ்பா பட சைகையைக் காட்டுவது கூட தவறா? நாங்கள் ஜனநாயகத்தில் வாழவில்லையா? ஒருவேளை அவரால் தனது சொந்தக் கட்சியின் தலைவரான சந்திரபாபுவின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையோ?” என்று கேள்வி எழுப்பினார்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “திரைப்படங்களில் நகைச்சுவையாக ஒரு வசனம் இருந்தால், அதை ஒரு பேனரில் வைக்கலாமா?. திரைப்படங்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள், வெளியே கொல்வது சரியா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? படங்களில் பாலியல் வன்கொடுமை காட்டப்படுவதால், வெளியேயும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.பொதுமக்களுக்கு நீங்கள் என்ன செய்தியை அனுப்ப முயற்சிக்கிறீர்கள்? சமீப காலமாக மாநிலத்தில் சிலர் வெறி பிடித்தவர்கள் போல நடந்து கொள்வதையும், ‘நாங்கள் வெட்டுவோம், கொல்வோம், தலை துண்டிப்போம்’ போன்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இதுதான் குற்றவாளிகளின் மனநிலை” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்