Skip to main content

பிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய்! ஃப்ளக்ஸ் பேனரில் தூங்கும் துயரம்

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Pudukkottai hospital

 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் 3 வயது பெண் குழந்தையுடன் வந்து பிரசவத்திற்காகச் சேர்ந்துகொள்கிறார். அவருக்கு துணையாக உறவினர்கள் யாரும் வரவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்தக் கர்ப்பிணியின் நிலை அறிந்து சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள். அந்த உதவி அவருக்குப் பெரிதாக இருந்தது. மருத்துவமனையில் கொடுக்கும் உணவை தனக்கும் தன் 3 வயது குழந்தைக்கும் கொடுத்து பசியாறிக் கொள்கிறார்.

 

சில நாட்களில் சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண்குழந்தை பிறந்தது. அடுத்த 3 நாட்களில் மருத்துவமனை பெட்டிலிருந்து வெளியே வருகிறார். சொந்த ஊருக்கு போனால் என்ன சொல்வார்களோ என்ற சந்தேகம் அவரை அடுத்த அடி எடுத்து வைக்கவிடவில்லை. ஒரு கையில் பிறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு மறு கையில் தன் 3 வயது பெண் குழந்தையுமாக வார்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், பார்வையாள்கள் தங்கும் ஷெட்டில் தனது சேலையால் ஒரு தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறார். மற்றவர்களைப் பார்க்க வருபவர்கள் கொடுப்பதை உண்டு அதே ஷெட்டில் இரவு, பகல், வெயில், மழை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தங்கிவிட்டார். 

 

அடுத்து தன் குழந்தையைப் படுக்க வைக்க பாய், துணிகள் இல்லை. அந்தப் பகுதியில் ஒரு கடை விளம்பரப் பதாகை கிடக்க, அவற்றை எடுத்துவந்து தரையில் விரித்து பிறந்த குழந்தையைப் படுக்க வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ஒரு சமூக சேவகி உணவு மற்றும் சிறு உதவிகளைச் செய்து வருகிறார். குளிர், கொசுக்கடியை மூவரும்  ஏற்கிறார்கள்.

 

இந்தப் பெண் குறித்து நம்மிடம் பேசிய சமூக சேவகி டெஸ்சி ராணி, பொன்னமராவதி பனையப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. கணவருக்கும் தீராத நோய். அவரும் இறந்துவிட்ட நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது இந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த ஒரு இளைஞர் மறுவாழ்வு கொடுக்கிறார். அதை அந்தப் புதிய கணவரின் அம்மா உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அவர் இந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் தாய் மற்றும் உறவுகளையும் உதற முடியவில்லை. இந்த நிலையில் அவர் மின்வாரிய ஒப்பந்தப் பணியளராக வேலைக்குப் போன நிலையில் இந்தப் பெண்ணை மிரட்டி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு மிரட்டி வெளியேற்றி விடுகிறார்கள் மாமியார் மற்றும் அவரது உறவினர்கள். 

 

அதன் பிறகு எங்கே போவது என்று நினைத்தவர், மருத்துவமனைக்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். குழந்தை பிறந்த தகவல் அறிந்து தன் கணவர் வருவார், வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் தங்கி உள்ளார் என்றார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு நாம் தகவல் தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவரது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.