Skip to main content

அடுத்தடுத்து உயிரை கொல்லும் நீட் அரக்கன்! - திருச்சியில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை!

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
subasree

 


நீட் எனும் அரக்கனால் கடந்த ஆண்டு மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த ஆண்டு மாணவி ப்ரதீபா தற்கொலை செய்து உயிரிழந்தார். ப்ரதீபாவின் மரணம் ஏற்படுத்திய சோகம் அடங்குவதற்கு முன்பாக திருச்சியில் நேற்று இரவு சுபஸ்ரீ என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பக்கம் உள்ள உத்தமர் கோவிலை சேர்ந்தவர் கண்ணன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் உள்ளார். இவரது மகள் சுபஸ்ரீ வயது17. சுபஸ்ரீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என விரும்பினார். இதற்காக துறையூரில் உள்ள சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதால் கேர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்பு பயிற்சியும் பெற்று நீட் தேர்வினை எழுதினார்.

ஆனால் ‘நீட்’ தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை. 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவரது டாக்டர் படிப்பு கனவு தகர்ந்து போனது. தேர்வு முடிவு வெளியானதில் இருந்தே தந்தை மற்றும் தாயுடன் அதிகம் பேசாமல் சுபஸ்ரீ இருந்து வந்தார். மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போய்விட்டதே என்று தனது தோழிகளிடமும் வேதனையுடன் கூறி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுபஸ்ரீயின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர். இரவு 10 மணி அளவில் தனது அறையில் இருந்த சுபஸ்ரீ திடீர் என துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை அறிந்த அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். உடலை கீழே இறக்கி திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி கொள்ளிடம் டோல்கேட் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் மட்டும் இன்றி உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்