Skip to main content

முன்பே சொன்ன நக்கீரன்... ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

 


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசின் முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு முன்னதாக, சசிகலா குடும்பத்தை எதிர்த்து  முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தன.
 

அந்த நிலையில்,  "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகர்ராவ். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.


 

ops


 

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக இருந்து வந்த ஓ.பி.எஸ்., டெல்லியில் இருப்பவர்கள் உதவியுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். துணை முதலமைச்சராகவும் ஆனார்.
 

அந்த சூழலில், ' கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று  சபாநாயகரிடம் மனு அளித்தது திமுக . ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார் சபாநாயகர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்தபோது, இவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதுதான் திமுகவின் கேள்வியாக இருந்தது. தாங்கள் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை என்பதால், திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 
 

அப்போது உயர்நீதிமன்றம், "சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா ? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் நேரடியாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது " என்று கூறி 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுகவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

இதையடுத்து திமுக தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய சூழலில், நீண்ட மாதங்களாக வழக்கு விசாரணைக்கு வராமலே இருக்கிறது. மணிப்பூரில் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தபோதும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாஜகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில்,  சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனை எதிர்த்து , சிக்கிம் உயர்நீதிமன்றத்தில், காங்கிரஸ் முறையிட,  காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயற்நீதிமன்றம். இதையடுத்து  காங்கிரஸ்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய,  அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், " இந்த பிரச்சனையில் சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் மீண்டும் ஒரு முறை சபாநாயகரிடம் மனு அளியுங்கள். நான்கு வாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் " என்று கூறியதோடு,  "  சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் "  என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தது.

 



 

 மணிப்பூர் காங்கிரஸ் மனு மீது, மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும்  உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து, திமுக தரப்பும் , ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி  கடந்த வாரம் புதிதாக மனு அளித்தது. இந்த நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது.

 

இந்த வழக்கு குறித்து டெல்லி வழக்கறிஞர்களிடம் பேசிய போது, "சட்டமன்றத்திற்குள் சபாநாயகரின் அதிகாரம் மட்டுமே செல்லும். சட்டமன்றத்திற்குள் அவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. சபாநாயகருக்கான அதிகாரம் குறித்து பல்வேறு வழக்குகள், பல்வேறு நீதிமன்றங்களில் முந்தைய காலங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  பல்வேறு தீர்ப்புகளும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, தன்னிடம் அளிக்கப்பட்ட மனு குறித்து சபாநாயகர் ஒரு முடிவைத் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. சபாநாயகரின் முடிவு செல்லுமா? செல்லதா? என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியும்.  ஆனால், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான  புகாரில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த வகையில்,  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என  சபாநாயகரை நோக்கி கேள்வி கேட்க முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.
 

மணிப்பூர் சட்டமன்ற விவகாரத்தில்,  மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம், ' சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனில்  மீண்டும் தங்களை நாடலாம் என கூறியிருப்பதால், அதுபோலவே,  மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுங்கள் என திமுகவுக்கு  அறிவுறுத்த வாய்ப்பிருக்கிறது " என்கின்றனர்.
 

இந்த சூழலில், இவ்வழக்கு பிப்ரவரி-4ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தஹி, ‘’ இந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. அப்படியிருக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? சபாநாயகர் அளிக்கும் தீர்ப்பின் மீது நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர, அவர் முடிவெடுக்காத சூழலில் அவருக்கு எப்படி உத்தரவிட முடியும்? அதனால் இந்த வழக்கு அடிப்படை முகாந்திரமில்லாதது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த விதியும் கிடையாது. சபாநாயகரின் அதிகாரம் குறித்து வழக்கு அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டும் ‘’ என வாதிட்டார்.  
 

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘’ கொறடா உத்தரவை மீறிய 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2017-ல் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‘’ என வாதாடினார். 

         

இது குறித்து விசாரித்த நீதிபதிகள், ‘’ இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் காலதாமதம் தேவையில்லாதது. எப்போது அவர் நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தகுதி நீக்க கோரும் மனுவை நீண்ட காலம் சபாநாயகர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. எதற்காக இந்த கால தாமதம்? இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் சபாநாயகர் ஆராய்ந்தாரா?  நடவடிக்கை எடுப்பதில் என்ன சிக்கல்? ‘’ என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், ‘’ இது குறித்து 15 நாட்களுக்குள்  சட்டமன்ற பேரவை செயலர் பதில் அளிக்க வேண்டும்‘’ என சொல்லி, விசாரணையை 14-ந்தேதிக்குத் தள்ளிவைத்தனர். 
  
 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 
 

அப்போது,  துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.  மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது  என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில், நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையயும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
 

தகுதிநீக்கம் செய்யும் முடிவை சபாநாயகர் தீர்மானிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்ததால் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு ஆபத்து இல்லை என்றும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்து 3 ஆண்டுகளாகியும் சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாறா என்பது சந்தேகம் தான் என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.