
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கையில் சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாகவும் பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாந்த் மீது ஏற்கனவே பார் மோதல் தகராறு, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது என ஐந்து வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் இந்த வழக்கில் பிரசாந்த்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ1 குற்றவாளி பிரதீப் குமார் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். ஏ2 குற்றவாளியாக ஜான் என்பவர் உள்ளார். ஏ3 குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை சேர்த்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropic Substances Act- NDPS 8(C), 29(1), 22(b) உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் இருந்து ஒரு கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்ட காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒரு நடிகருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் பிரதீப்குமார் என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை செய்த பொழுது பிரதீப்குமார் போலீசாரிடம் சிக்கினார். பெங்களூரில் வசித்து வரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் மூலம் தான் போதைப் பொருளை வாங்குவதாக பிரதீப் குமார் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வழக்கில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் போதைப்பொருள் விற்பனை குறித்த தகவல்களை போலீசாருக்கு கொடுக்கலாம். அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.