Skip to main content

தமிழ் மொழியை எப்படி அழிக்க முடியும்? வானதி சீனிவாசன் கேள்வி 

Published on 02/03/2018 | Edited on 03/03/2018

தமிழ் மொழியை எப்படி அழிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
நக்கீரன் இணையதளத்திற்கு வானதி சீனிவாசன் அளித்த சிறப்பு பேட்டி:-

Vanathi Srinivasan



தி.மு.க.வை அழிக்க பா.ஜ.க. வஞ்சக திட்டம் தீட்டிவருகிறது. திராவிட இயக்கத்தை வேரோடு அழிக்க பார்க்கிறது. திராவிடத்தை வெல்ல எந்த முயற்சிக்கும், எந்த வித சக்திகளுக்கும் அனுமதி தர மாட்டோம் என வைகோ கூறியிருக்கிறாரே?
வைகோ அவர்களுக்கும், திராவிடத்தின் பெயரால் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கும் பாஜகவின் தாக்கம் என்பது தமிழகத்தில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் அரசியல் சூழல் என்பது தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஆதரவு, பாஜக எதிர்ப்பு என்று பாஜக ஒரு மையப்புள்ளிக்கு வரக்கூடிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது. பாஜகவின் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கலாம். ஆனால் வரக்கூடிய காலத்தில் பாஜக வளர்ச்சி என்பதை இவர்களால் ஓரளவு யூகிக்க முடிகிறது. அதனால்தான் வைகோ போன்றவர்கள் திராவிடம் என்ற சொல்லை அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் மொழி, இன அரசியலைப்பற்றி தெளிவான பகுப்பாய்வு செய்யக்கூடியவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இளைஞர் சக்தியை ஈர்க்க முடியாத திமுகவும், மதிமுகவும் திராவிடத்திற்கு ஆபத்து வந்ததுபோல கூக்குரல் எழுப்பிக்கொண்டிருப்பது என்பது அவர்களுக்கு பாஜக மீது உள்ள ஒரு பயத்தை காட்டுகிறது. இதே வைகோ அவர்கள், பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தார். அப்போது இவர் ஜெயிப்பதற்கு மோடி தேவைப்பட்டார். அந்த தேர்தலின்போது மற்ற கட்சிகளையெல்லாம்கூட பாஜகவின் பக்கம் கொண்டுவருவதற்கு வைகோ உதவி செய்தது ஏன்? அப்போது திராவிட கட்சிகளுக்கு ஆபத்து என்பதை அவர் உணரவில்லையா?

காவிரி பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்களை டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வழங்குவது என்று முடிவு செய்தோம். தமிழக அரசு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளது. ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. 8 கோடி தமிழர்களை மோடி உதாசினப்படுத்துகிறார் என வைகோ குற்றம் சாட்டுகிறாரே?
காவிரி மேலாண்மை வாரியத்தை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கக்கூடிய தீர்ப்பு மட்டுமல்ல. இதுநாள் வரை பேப்பர்களிலேயே இருந்து வந்த தீர்ப்பை நிஜமாக்குவதற்கான வாய்ப்பு கூடி வந்திருக்கிறது. இதில் அரசியல் செய்ய நினைக்காமல், இப்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பை நல்ல முறையில் எப்படி அமல்படுத்துவது என அனைத்துக் கட்சிகளும் யோசிக்க வேண்டிய நேரம். அங்கிருந்து ஒரு அறிக்கை, இங்கிருந்து ஒரு அறிக்கை என்று அறிக்கை போர் வாசிக்காமல், சற்று காலம் பொறுத்திருந்து நீதிமன்றத்தின் கால அளவுக்குள் நின்று அதற்கு பின்னால் ஆக்கப்பூர்வமாக யோசிப்பது நம்முடைய விவசாயிகளுக்கு பெரும் பலன் கொடுபபதாக இருக்கும்.

பிரதமரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு...

நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. பிரதமரை பார்ப்பதால் மட்டும் இதில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும். பார்க்கலாம் அவ்வளவுதான். பிரதமரின் கீழ் உள்ள அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது. அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது. அதற்கு பின்னால் காலதாமதம் ஆகும்போது பிரதமரை சந்திப்பது என்பது இயல்பானது. இந்த விசயத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக அணுகிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல நேரம். அதே நேரத்தில் கொஞ்சம் பொறுமையும் காத்தால் நமக்கான நீதி நிச்சயம் வந்து சேரும்.

ஆன்மீக அரசியல் என்று ரஜினி பூச்சாண்டி காட்டுகிறார். பா.ஜனதா கொடுக்கும் அழுத்தத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறாரே?

தமிழகத்தில் எது நடந்தாலும் மோடியும், பாஜகவும் காரணம் என்று சொல்லக் கூடிய சூழல் இப்போது வந்துவிட்டது. அதனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. கோரஸ் பாடும்போது, அவர் மட்டும் தனியாக நின்றால் நன்றாக இருக்காது. அதனால் அதில் அவரும் சேர்ந்துவிட்டார்.

திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். தமிழ் மீது பற்று இருப்பதாக சொல்லிவிட்டு தமிழை அழிக்க அத்தனை முயற்சிகளையும் தேசிய கட்சிகள் செய்கின்றன. இந்திதான் ஆட்சி மொழி, இந்தி பேசு என்கிறார்கள். தமிழை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறாரே?

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஏன் தமிழை வளர்க்கவில்லை என்று சொன்னால் தம்பிதுரையின் பதில் என்ன. தமிழகத்தில் 50 வருடத்திற்கு முன்பாக இருக்கின்ற தமிழ் இப்போது வளர்ந்திருக்கிறதா? அழிந்திருக்கிறதா? யார் காரணம்? ஒருவேளை அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, இப்போது வந்திருக்கின்ற மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியால் தமிழை அழித்துவிட முடியுமா? தமிழ் என்பது சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழி என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.

தமிழ் மீது பற்று இருப்பதாக சொல்லிவிட்டு தமிழை அழிக்க அத்தனை முயற்சிகளையும் தேசிய கட்சிகள் செய்கின்றன. ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.
ஐஐடியில் நிச்சயமாக தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி ஐஐடி நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஆனால் இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பிரதமரே நேரடியாக நிகழ்ச்சி நிரல் தயாரித்த மாதிரி பேசினால் என்ன அர்த்தம். திருவள்ளுவரை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துச் சென்றது பாஜக. பாரதியாரின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாட செய்தது பாஜக. ஆர்ப்பாட்டம் செய்யாமல், மொழி அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக ஒரு மொழியை மதிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதை வைத்து அரசியல் லாபம் அடைந்த திராவிட கட்சிகள், மொழி மொழி என கூக்குரலிட்டு உண்மையான தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல், தமிழில் பேசக்கூடிய இளைஞர்களையும் ஊக்கப்படுத்தாமல், தமிழை தங்கிலீஷாக மாற்றக்கூடிய சாதனைத்தான் திராவிடக் கட்சிகள் செய்திருக்கின்றன. ஆக தமிழ் மொழியை காப்பாற்றுவதைப் பற்றியெல்லாம் இனி திராவிடக் கட்சிகள் பேசவேக் கூடாது. அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் தமிழ் மீடியத்தில் படிக்கின்ற வகுப்புகளையெல்லாம், மூடப்பட்டு வரக்கூடிய சூழலை ஏற்படுத்தியவர்கள், தமிழ் மொழி காவலர்களைப்போல மக்களை இனிமேலும் வேஷம்போட்டு ஏமாற்ற வேண்டாம். இவ்வாறு கூறினார்.

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.