Skip to main content

“ராகுலின் இம்முன்னெடுப்பு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும்..” - செல்வப்பெருந்தகை 

Published on 06/09/2022 | Edited on 10/09/2022

 

selvaperunthagai talk about congress unity journey

 

காங்கிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு நாட்டு மக்களை சந்திக்கவுள்ளது. இந்த பயணம் வரும் வியாழன் அன்று தொடங்குகிறது. இதனை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதற்காக இன்று ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார். 

 

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையிடம் நாம் பேசினோம். அப்போது அவர், "வியாழன் காலையில் ராகுல் காந்தியின் தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மாலையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் ஒற்றுமை பயணத்தை கையில் தேசியக் கொடி  ஏந்தி தொடங்க உள்ளார். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அடுத்த நாள்(8.9.20022) காலையில் கன்னியாகுமரியில் காலை 7 மணிக்கு நடை பயணத்தை தொடங்கி 10.30 மணிக்கு முடிக்கின்றோம். அதனை பிறகு மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடிக்கிறோம். இப்படியான பயணத்தில் 10 ஆம் தேதி தமிழக எல்லையை கடந்து திருவனந்தபுரத்தின் வழியாக எங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்" என்றார். 

 

சமீபத்தில் காங்கிரஸில் இருந்த கபில் ஷிபில் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விலகியதோடு, ராகுல் காந்தியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்?

 

"ஒரு பரிணாம வளர்ச்சி வரும்போது சில சிக்கல்களும், நடைமுறை பாதிப்புகளும்  ஏற்படும். அதுபோலத்தான் தற்போது, ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும், மூத்தவர்களே பதவிகளை ஆக்கிரமிக்க கூடாது, எல்லா சமூகத்திற்கு பரவலான அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற தெளிவான எண்ணத்தில் உள்ளார். ஆனால் குற்றச்சாட்டு வைப்பவர்கள் எல்லாம் பழமைவாதிகள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளாக பதவிகளில் இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த ஆட்சி, அதிகாரம், பொறுப்புகள் இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இது போன்ற வெறுப்புகளை வாரியிறைத்து விட்டு வெளியே சென்று விடுகின்றனர். இதை நாங்கள் எதிர்பார்த்தது தான்" என்று பதிலளித்தார். 

 

ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருக்கு என்று குலாம் நபி ஆசாத் விமர்சிக்கிறார்?

 

"இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடியை தைரியமாக எதிர்க்கிற, அவர்கள் செய்யும் செயல்களை தட்டிக்கேட்கும் தலைவர் ராகுல் காந்தி மட்டும் தான். அப்படி இருக்கும்போது இந்த விமர்சனத்தை வைக்கும் குலாம் நபி ஆசாத் பிரதமரின் செயலை தட்டி கேட்கவேண்டியது தானே. அவர்களால் முடியவில்லை, அதனால் ராகுல் செய்கிறார். அப்படி இருக்கையில் ராகுல் காந்தியை எப்படி குழந்தைத்தனம் என்று விமர்சிக்க முடியும். போகிற போக்கில் எதையாவது வாரியிறைச்சிட்டு போகிறார்கள்" என்றார். 

 

காங்கிரஸின் முகமாக இருக்கும் ராகுல் காந்தியை மையமாக வைத்துத்தான் ஒற்றுமை பயணம் நடைபெற உள்ளது, அப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வைத்து வேறொருவரை தலைவரை தேர்ந்தெடுப்பது எப்படி சாத்தியமாகும்?

 

"காங்கிரஸ் என்றால் ராகுல் காந்தி, ராகுல் காந்தி என்றால் காங்கிரஸ்.  தொண்டர்கள் ராகுலை வேறுபடுத்திப் பார்க்கவில்லை. தலைவர்கள் வேண்டுமென்றால் வேறுபடுத்தி பார்க்கலாமே தவிர தொண்டர்கள் எப்போதும் ராகுல் காந்தியை தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ராகுலும் தொண்டர்களின் பக்கம் நிற்கிறார், அவர்களின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.

 

பாஜகவில் இன்றிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக மோடி மற்றும் அமித்ஷா எடுக்கும் முடிவுகளை  அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது போன்ற பக்குவம் ஏன் காங்கிரஸுக்கு வரவில்லை?

 

நீங்கள் சொல்வது தவறு. பாஜகவில் மோடியும் முடிவெடுக்க முடியாது, அமித்ஷாவும் முடிவெடுக்க முடியாது. பாஜகவில் எப்போதுமே முடிவெடுப்பது ஆர்.எஸ்.எஸ் அவர்கள் நாக்பூரிலிருந்து என்ன செயல் திட்டம் கொடுக்கிறார்களோ அதைத்தான் இவர்கள் செயல்படுத்துகிறார். இவர்கள் எங்கள் கட்சியை போன்று செயல்பட்டால் இவர்களையே ஆர்.எஸ்.எஸ் பதவியிலிருந்து எடுத்து விடுவார்கள்" என்றார். 

 

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக செல்கிறது மறுபுறம் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று நிதிஷ் குமாரும், சந்திரசேகர ராவும் சொல்கிறார்கள். அந்த முழக்கத்தை ஏன் காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை?

 

ஒருவர் இல்லாமல் இந்த நாட்டை உருவாக்குவோம் என்று சொல்வது என்ற அநாகரிக கருத்தை சொல்ல நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் சொல்வது போன்று நாங்கள் ஒருபோதும் சொல்லமாட்டோம். அது ஒரு அரசியல் கட்சி, நாங்கள் ஒரு அரசியல் கட்சி. இங்கு யாரும் யாரையும் அழிக்க முடியாது. அவர்களின் சித்தாந்தம் இந்துத்துவாவை வளர்த்தெடுப்பது, நாங்கள் எல்லோருக்குமான கட்சி" என்றார். 

 

இறுதியாக இந்த ஒற்றுமை பயணம் பாதை யாத்திரை மிக பெரிய திருப்புமுனையை எதிர்படுத்தும். எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.