Skip to main content

அ.தி.மு.க.வை சீண்டிய பிரேமலதா! ''உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்'' என அ.ம.மு.க. ஆதரவு!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

premalatha

 

கூட்டணியில் இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை சீண்டுவதும் பிறகு அமைதியாவதும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் வாடிக்கை.

 

தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்த பிரேமலதா, சசிகலாவையும் அ.தி.மு.க.வையும் மையப்படுத்தி அவர் பேசும்போது, "இன்னைக்கு இருக்கும் அமைச்சர்கள் எல்லோருமே சசிகலாவால் பதவி பெற்றவர்கள்தான். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியைக் கொண்டு வந்ததும் அவர் தான். அதனால், சசிகலா விடுதலையாகி வெளியே வரும்போது அ.தி.மு.க.வில் பெரிய அதிர்வலைகள் உருவாகும்'' என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

 

பிரேமலதாவின் இத்தகையப் பேச்சு அ.தி.மு.க. அமைச்சர்களையும் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலரும் இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடியிடம், அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் பிரேமலதா தலையிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். பிரேமலதாவின் பேச்சு குறித்து உளவுத்துறையும் எடப்பாடிக்கு நோட் போட்டுள்ளது.

 

இந்த நிலையில், பிரேமலதாவின் பேச்சு எடப்பாடியையும் கோபப்பட வைக்க, உடனே அமைச்சர் ஜெயக்குமாருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அதன்படி, பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார் பிரேமலதா. அவங்க கட்சி வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. நான் உட்பட எங்கள் எல்லோரையும் அமைச்சர்களாக நியமித்தவர் புரட்சித் தலைவி அம்மாதான். இதில் சசிகலாவின் ரோல் எங்கிருக்கிறது? அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதலமைச்சரானவர் எடப்பாடி. வேறு யாரும் கையெழுத்துப் போட்டு அவர் முதலமைச்சராகவில்லை'' என ஆவேசப்பட்டார்.

 

சசிகலாவுக்கு எதிராக ஜெயக்குமார் உயர்த்தியிருக்கும் இந்தக் குரல், தினகரனின் அ.ம.மு.க நிர்வாகிகளையும் கோபப்பட வைத்துள்ளது. இதுறித்து தினகரனிடம் மா.செ.க்கள் பலரும் பேச, தினகரனும் ஜெயகுமாரை விமர்சித்திருக்கிறார். ஜெயக்குமாரின் கருத்து குறித்து அ.ம.மு.க.வின் தேர்தல் பிரிவு செயலாளரும் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செந்தமிழனிடம் கேட்டபோது, "அம்மா (ஜெயலலிதா) இருந்த காலத்திலேயே சின்னம்மாவின் (சசிகலா) பரிந்துரை இல்லாமல் யாரும் அமைச்சர்களாகவோ கட்சிப் பதவிகளுக்கோ வந்ததில்லை. இந்த உண்மை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் வரைக்கும் தெரியும். அம்மா ஜெயலலிதாவின் சுகதுக்கங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் சின்னம்மா சசிகலாதான் உறுதுணையாக இருந்தார். நான் அமைச்சராக இருந்திருக்கிறேன். என்னை அமைச்சராக்கியவர் சின்னம்மாதான். ஒருமுறை அமைச்சர்களையும் மா.செ.க்களையும் போயஸ்கார்டனுக்கு வரவழைத்த ஜெயலலிதா, 'என்னிடம் அவசரமாக ஏதேனும் தகவல் தெரிவிப்பதாக இருந்தால் சின்னம்மாவிடம் தெரிவியுங்கள். அவரது உத்தரவை என் உத்தரவாக எடுத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார்.

 

சின்னம்மா என்கிற வார்த்தையை நிர்வாகிகளிடம் முதலில் பயன்படுத்தியதே ஜெயலலிதாதான்.

 

sasikala-eps-ops

 

இன்னைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதாலும் சின்னம்மா சிறையில் இருக்கிறார் என்பதாலும் அவருக்கு எதிராக இவர்கள் பேசலாம். ஆனால், அமைச்சர்களாக இருந்ததும், இருப்பதும் சசிகலாவால்தான் என்பது அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.

 

ஜெயலலிதா மறைந்ததும், ஓ.பி.எஸ் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அந்தச் சமயத்தில், அமைச்சர்கள் எல்லோருமே என்னால் நியமிக்கப் பட்டவர்கள்தான்; அவர்களில் எந்த மாற்றமும் வேண்டாம் என சொல்லி, அமைச்சரவை பட்டியலை ஓ.பி.எஸ்.சிடம் தந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது சின்னம்மா சசிகலாதானே! அவர் தந்த பதவி வேண்டாம்னு இதே ஜெயக்குமார் அன்றைக்குச் சொல்லியிருக்கலாமே? அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை எல்லா அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளைப் போல புகழ்ந்து பேசியவர் ஜெயக்குமார்.

 

Ad

 

அரசியல் சூழ்ச்சிகளால் சின்னம்மா சசிகலா, முதல்வராவது தடுக்கப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை அமைச்சர்களாகவும் உருவாக்கிவிட்டே சிறைக்குச் சென்றார் சின்னம்மா. விரைவில் அவர் வெளியே வருகிறார். எடப்பாடி உள்பட அனைவரும் சின்னம்மா சசிகலாவின் காலில் விழுந்து வணங்குவார்கள். இது நடந்தேதீரும். அதனால் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் சகோதரி பிரேமலதா'' என அதிரடி காட்டுகிறார் செந்தமிழன்.

 


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.