Skip to main content

அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் பி.ஜே.பி..! தேர்தலுக்காக காத்திருந்த சி.பி.ஐ.! 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

ddd

 

ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பதுபோல, தமிழகத்தையே அதிர வைத்த அந்தக் கொடூரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பரபரப்பானது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5-ந் தேதி இரவு சி.பி.ஐ., பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை தூசு தட்டி, 3 பேரைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறது .


 
யார் அந்த 3 பேர்?

 

3 பேருமே அ.தி.மு.க.காரர்கள் என்பதும், அவர்களின் பெயர் ஹெரான் பால், பாபு, அருளானந்தம் என்பதும்தான் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி மாநகர மாணவரணி துணைச் செயலாளர். பொள்ளாச்சி அ.தி.மு.க வி.ஐ.பி.யின் வலது கையாகவே சொல்லப்படும் அருளானந்தத்தை கட்சி ஆஃபிசில் வைத்தே தூக்கிக்கொண்டு போய் விசாரித்துக்கொண்டிருக்கிறது சி.பி.ஐ.

 

ஹெரானும், பாபுவும் பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன்கள் இருவருக்கும் நெருக்கம். பாபு, அந்த வி.ஐ.பி.யின் மகன்களுக்கு பெண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் ஆட்களில் மிக முக்கியமானவன். சி.பி.ஐ. இந்த வழக்கை மீண்டும் தோண்டித் துருவும் என்பதையும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டியிருந்தது.

 

தேர்தல் பிரச்சாரத்தில், அ.தி.முக.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ள நிலையில், சி.பி.ஐ மேற்கொண்ட கைது மூவ் நடவடிக்கைகளின் பின்னணி பற்றி சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.  

 

“பொள்ளாச்சி வழக்கில் நக்கீரனின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரி என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார், ஆச்சிபட்டி மணிகண்டன்... என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இப்போது விசாரணைக்கு கொண்டு வந்திருக்கும் ஹெரான் பால் உள்ளிட்ட ரெண்டு பேரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய நபர்களே.

 

இந்த ஹெரான் பால், பெண்களிடம் சைக்கோ போல நடந்து கொள்வான். பெல்ட்டால் அடிக்கும் கொடூரத்தை ரசிக்கும் மனப்பான்மை உடையவன்... என நீங்கள் சொல்லியதை வைத்தே நாங்கள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தோம். தற்போதைய அரசியல் சூழல் - முதல்வர் வேட்பாளர் - சீட் பங்கீடு எனப் பல கணக்குகள் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியில் உள்ளன. பொள்ளாச்சி பவர் புள்ளியான அ.தி.மு.க. வி.ஐ.பியின் வாரிசுகளுடன் தொடர்புடையவர்களை நெருங்கியிருக்கிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வாரிசுகளையும் நெருக்குவோம்.

 

அரசியல் காரணங்களைத் தாண்டி, எங்கள் விசாரணையில் புதிய கோணங்களும் கிடைத்துள்ளன. வழக்கமாக திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய் அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆனால் இப்போது எங்கள் விசாரணையில் இரண்டு பெண்களைக் கண்டறிந்து விசாரித்தோம். அவர்கள் இருவரையும் சபரிராஜன் தன் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறான் .

 

அங்கே வைத்து வல்லுறவு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதில் சபரி ராஜனோடு அருளானந்தம், பாபு, ஹெரோன் பால் மூன்று பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

 

ddd

 

இந்த விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்கள் இன்னும் முக்கியமானதாக இருக்கும். அவரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய ஆள்தான். திருநாவுக்கரசை விசாரிக்கும்போது, பொள்ளாச்சி நகராட்சித் தலைவராய் இருந்த கிருஷ்ணகுமார், எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். அவருக்காக நிறைய வேலைகளை செய்திருக்கிறேன் என திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இப்போது உடல் நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் திருநாவுக்கரசு.

 

அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்துள்ளோம். கிருஷ்ணகுமாரை கைது செய்து தூக்குவதன் மூலம் இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் இருக்கிறது பி.ஜே.பி கவர்மெண்ட். இந்த வழக்கு கடைசிகட்ட நிலையை எட்டி விட்டதாகவே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்களுக்கு உத்தரவும் இடப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

 

இந்த நிலையில் அருளானந்தம் நிதின் கட்கரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், எஸ்.பி.வேலுமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வைத்து, அருளானந்தம் மேல்பட்ட மனிதர்களோடு நல்ல பழக்கத்தில் இருந்திருக்கிறான் என கண்டறிந்திருக்கிறது சி.பி.ஐ.

 

பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் வாரிசுகளை சி.பி.ஐ. இன்னும் நெருங்காத நிலையில், புதுப்புது ஆதாரங்கள் கிடைத்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த வழக்கை, அரசியல் சூழலைப் பொறுத்து எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம் என்கிறார்கள் நிலவரம் அறிந்த அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும்.

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.