Skip to main content

கொடூர விபத்து! -அதிர்ச்சியான இ.பி.எஸ். & ஓ.பி.எஸ்.!

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

மெகா கூட்டணி அமைந்துவிட்ட சந்தோஷத்தில், கூட்டணியின் தலைமைக் கட்சியான அ.தி.மு.க.வின் முன்னணியினரை விருந்துக்கு அழைத்தார் பா.ம.க.வின் நிறுவனரான டாக்டர். ராமதாஸ். சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடியும் மதுரையிலிருந்து புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திண்டிவனம் வந்தனர். அங்கே ஒரு மினி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட மந்திரியான சி.வி.சண்முகம். அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த எடப்பாடி, தி.மு.க.வை ஒரு பிடிபிடித்துவிட்டு, ""கடந்த தேர்தலில் அம்மாவுக்கு எப்படி வெற்றியைக் கொடுத்தீர்களோ, அதேபோல் இந்த முறையும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்'' என தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
pmkfest
கூட்டம் முடிந்து இரவு 9.25-க்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உட்பட அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், தைலாபுரம் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.வினரும் பா.ம.க.வினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். அந்த மோதலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினரான முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். சி.வி.சண்முகம் காருக்கு அடியில் படுத்து, மயிரிழையில் உயிர் தப்பினார்.

அப்போதிருந்தே சி.வி.சண்முகத்திற்கும் பா.ம.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தம்தான். அந்த பழைய பகை நினைப்பில்தான், அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் ஸ்டார் ஓட்டலில் கையெழுத்தானபோது, சண்முகம் அங்கு செல்லவில்லை. எனவே திண்டிவனம் பொதுக்கூட்டத்துடன் சரி, தைலாபுரம் விருந்துக்கு செல்வதில்லை என்ற முடிவோடுதான் இருந்தார் சி.வி.சண்முகம். ஆனால் எடப்பாடியோ "பழசு எதையும் மனசுல வச்சுக்காதீங்க, வண்டில ஏறுங்க' என சண்முகத்தை வற்புறுத்தி அழைத்ததன் பேரில் தைலாபுரம் தோட்டத்திற்குள் எண்ட்ரியானார் சி.வி.சண்முகம்.

முதல்வர் உட்பட கேபினெட்டே ஆஜராவதால், தோட்டத்தைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோட்டத்திலிருக்கும் விருந்தினர் வரவேற்பு அறைக்குள் இருபத்தைந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்சியின் மற்ற முன்னணியினரின் கார்களை வெளியிலேயே நிறுத்திவிட்டதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி வரவேற்றனர் ராமதாஸும் அன்புமணியும். பழைய பகை மறந்த புது விருந்தினரான சி.வி.சண் முகத்துக்கு சிறப்பு வரவேற்பு தரப்பட்டது. பரஸ்பர நலவிசாரிப்புகள், சிறிது நேர அளவளாவல்களுக்குப் பின் விருந்து மண்டபத்திற்கு அனைவரும் சென்றனர்.

ஆம்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் தயாரான சிக்கன், மீன் வகையறாக்கள் உட்பட 80 வகை உணவுகள் ரெடியாக இருந்தன. அவற்றை இரு கட்சிகளின் முன்னணியினர் ஒருகை பார்த்தாலும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., டாக்டர் ராமதாஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிட்டனர். கூட்டணி நல்லபடியாக அமைந்திருப்பதால் அசைவம் வேண்டாமே என ராமதாஸிடம் எடப்பாடி சென்டிமெண்டாக ஃபீல் பண்ணியதால்தான் சைவமாம். 55 நிமிடங்களில் நடந்து முடிந்த கோலாகல விருந்துக்குப் பின் எடப்பாடி உட்பட அனைவரும் இரவு 10.30-க்கு தைலாபுரம் தோட்டத்தைவிட்டுப் புறப்பட்டனர், வெளியில் காத்திருந்த ஏகப்பட்ட மீடியாக்களிடம் எதுவும் பேசாமல்.
pmkfest
அனைவரையும் வழியனுப்பிவிட்டு, இரவு 12 மணிக்கு மேல் விழுப்புரத்தில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார் எம்.பி. ராஜேந்திரன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது உதவியாளர் தமிழ்ச்செல்வனுடன் சென்னைக்குப் புறப்பட்டார் எம்.பி. ராஜேந்திரன். எம்.பி.யுடனேயே பகல் முழுவதும் பயணித்து, இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத் திருந்ததால், சரியான தூக்க கலக்கத்தில் இருந்தார் டிரைவர் அருமைசெல்வம். இதன் விளைவால்தான் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது கார் பலமாக மோதியதில், காரின் முன்பகுதி நொறுங்கி, டிரைவரின் அருகில் இருந்த எம்.பி.ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். டிரைவர் அருமை செல்வமும் எம்.பி.யின் உதவியாளர் தமிழ்ச்செல்வனும் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

22-ஆம் தேதி பொழுது விடிந்ததும் இந்த சோக செய்தியைக் கேள்விப்பட்ட இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் பதறியடித்து ஓடி வந்து ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தயவால் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஆகி, 2014-ல் எம்.பி.யு மானார் ராஜேந்திரன். வானூர் அருகே உள்ள அதனப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சாதுவான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் திவ்யா, தீபிகா என்ற மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் மரணத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் ஜெ. பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த கோரவிபத்து நடந்த இரண்டே நாட்களில், அதாவது 24-ஆம் தேதி, கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், காரில் போய்க் கொண்டிருந்த போது, தலைவாசல் அருகே, கார் தலைகுப்புற கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பியிருக்கிறார் காமராஜ். மேற்கண்ட இரு சம்பவங்களும் அ.தி.மு.க. தொண்டர்களிடையே ராங் சென்டிமெண்டை ஏற்படுத்தியதால் ஷாக்காகியுள்ளனர்.
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.