Skip to main content

இந்தியாவின் 8வது தேசியக் கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி; 2024ல் பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா?

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

hjk

 

'ஆம் ஆத்மி' 10 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு பேரையே இந்திய அரசியல் களம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இன்றைக்கு 150க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை இந்தியா முழுவதும் பெற்று தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் தாண்டி டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி., பிரதான தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளை அந்த இரண்டு மாநிலங்களிலும் கூப்பில் அமர வைத்துள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க இன்று வெளியான குஜராத் தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மியின் அதிரடி தொடர்கிறது. குறிப்பாக 5 தொகுதிகளில் அக்கட்சி முன்னணியிலிருந்து வருகிறது. இதன் மூலம் குஜராத்தில் தனது கால் தடத்தைப் பதித்துள்ளது. 77 தொகுதிகளில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அங்கு 17தொகுதிகளில் மட்டுமே முன்னணியிலிருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இந்த படுதோல்வி அடையப் பிரதான காரணமாகக் குஜராத்தில் ஆம் ஆத்மி இருந்துள்ளதாகத் தேர்தல் முடிவுக்கு பிறகான நிலவரம் வெளிப்படையாகக் காட்டுகிறது.

 

பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டால் பாஜகவின் வாக்குகளை விட அதிகமாக இருக்கிறது. தேர்தல் கணக்குகள் இதே முறையில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஆம் ஆத்மி பிரித்த வாக்குகளே பாஜக இந்த இமாலய வெற்றிக்கும், காங்கிரஸின் இந்த படுதோல்விக்கும் காரணமாக இருந்துள்ளது என்பது மட்டும் நிஜம். அந்த வகையில் குஜராத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி இமாச்சல் பிரதேசத்தில் எந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது ஆரம்பம்தான், அடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,கர்நாடகா  உள்ளிட்ட 10 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ளது. 

 


அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசியக் கட்சியாக மாறியுள்ளது. ஒரு மாநிலக் கட்சி தேசிய கட்சியாக மாறுவதற்கு மொத்த நாடாளுமன்ற இடங்களில் 2 சதவீத இடங்களை மூன்று வெவ்வேறு மாநிலங்களில் பெற்றிருக்க வேண்டும், அதாவது குறைந்தது 11 மக்களவை உறுப்பினர்களை மூன்று மாநிலங்களிலும் சேர்த்துப் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது வாய்ப்பாக 4 மாநில சட்டப்பேரவையில் அக்கட்சி 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், கூடவே 4 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். 

 

மூன்றாவது வாய்ப்பாக குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளையும், 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றால் அந்த கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும். ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி உள்ள நிலையில் தற்போது நான்காவது மாநிலமாக குஜராத்திலும் 12 சதவீத வாக்குகளோடு 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி இந்தியாவில் எட்டாவது தேசிய கட்சி என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறது.

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024

 

 "Anything can happen to Kejriwal in jail" - Delhi MP Accusation

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் சிங் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கும், டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பா.ஜ.க.வின் நடவடிக்கை ஒருவரைக் கொல்லும் நிலைக்குக்கூட தள்ளும். எனவே, சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.