Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #32

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

maayapura part 32

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா பேசிய விஷயங்களை கேட்டு அசோக் திகைத்து நின்றான். அவர்கள் நோக்கம் திட்டம் என்னவென்று அசோக்கிற்கு புரியவில்லை. இருந்தாலும் ஒரு உயரிய பாதையை நோக்கியே அவைகள் செல்கின்றன என்பதை மட்டும் உணர்ந்தான். சிறிது நேரத்திற்கு மேல் அவர்களால் நடக்க முடியவில்லை. மனிதர்களின் மாபெரும் பிரச்சனையே என்ன தெரியுமா, அவர்களின் மனம் செல்லும் வேகத்திற்கு உடல் செல்வதில்லை. ரமாவின் நிலையும் இதுதான் உடல் ஓய்வை கெஞ்சியது. மனம் சாதிக்க விஞ்சியது. அதனால் திரும்ப வீட்டிற்கு செல்லலாம் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்.

 

வீட்டிற்குள் நுழையும்போதே ஒரு மணி நேரத்தில் வீடு தலைகீழாக மாறி இருந்தது. வாசலிலேயே அழகிய கோலம் வரவேற்றது. உள்ளே நுழையும் போதே பில்டர்காபி வாசனையை மூக்கு குத்தகை எடுத்தது. ரமாவின் படுக்கை சுருட்டப்பட்டு அசோக்கின் அறையில் வைக்கப்பட்டு இருந்தது. தனம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலை ஸ்ரீதேவி பாடிய நினைவை ஏற்படுத்தியது. வீட்டில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஏன் அந்த வீட்டில் உள்ள எறும்பு கூட சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இரண்டு ஜீவன்களைத் தவிர புவனாவும் நாகம்மாவும் இன்னும் திருப்பள்ளி எழுச்சி முடிக்கவில்லை இவை அனைத்தையும் ஒரே பார்வையில் படம் பிடித்தார் ரமா.

 

உள்ளே நுழைந்து அங்கிருந்த ஈஸிசேரில் லேசாக சாய்ந்து கண்ணை மூடினார் ரமா. "அம்மா.. அம்மா" என்று அழைக்கும் குரல் கேட்டு கண் திறந்தாள். புன்னகை முகத்துடன் ஒரு டம்ளரை நீட்டினாள் சங்கவி. அவளை பார்க்கும்போது இந்த புன்னகை தான் எத்தனை ரணங்களுக்கு மருந்தாகிறது என்பதை நினைத்துப் பார்த்தாள்.

"ஏன் சங்கவி நான் காபி டீ சாப்பிட மாட்டேன் என்பது உனக்குத் தெரியாதா? என்று கேட்டாள். நம்ம மனசு எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்முடைய விருப்பு வெறுப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்குமே தவிர பிறரை எந்த அளவு புரிந்து வைத்துள்ளோம் என்பதை நினைக்காது.

"தெரியும் மா அதை கொண்டு வரலை ,இது வேற மா என்றாள்" "என்னது ..?"என்று  கேட்டுக் கொண்டே டம்ளரை வாங்கி பார்த்தாள் பச்சை நிறத்தில் ஒரு திரவம் இருந்தது.

"இது பட்டிப் பூ மா, சுடுகாட்டுப் பூ என்றும் சொல்வார்கள். ஒரு பத்து பூவை எடுத்து கொதிக்க வைத்து குடித்தால்..." என்று சங்கவி முடிப்பதற்குள் "கேன்சர் குணமாகுமா?" என்று ரமா முடித்தாள். "இல்லைமா நோயின் வீரியம் குறையும்" என்று சொன்னாள் சங்கவி. அன்புடன் கொடுத்ததை வாங்கி நன்றியுடன் குடித்தார் ரமா.

 

வயல் வெளியில் இருந்து வந்ததும் இருந்த பழைய சோறு சாப்பிட்டு விட்டு அப்பாவிடம் ஏதோ பேசினான் அசோக். பிறகு அப்பாவும் அசோக்கும் பக்கத்தில் காலியாக இருந்த வைக்கோல் போர் போட்டு இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தனர். பண்ணையில் வேலை செய்யும் ஆட்களை கூப்பிட்டு அந்த வைக்கோல் போரை தோட்டத்தின் பின்பக்கம் போட்டனர். சிறிது நேரத்தில் எங்கோ கிளம்பி சென்றான் அசோக். அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் செங்கல் மணல் எல்லாம் வண்டியில் வந்து இறங்கியது.

 

வீட்டின் பக்கத்தில் இருந்த காலி இடத்தை சுத்தம் பண்ணிவிட்டு கடகடவென அங்கே ஒரு சிறிய அறை கட்டப்பட்டது. தூங்கி எழுந்து வந்து வெளியே பார்த்த மணி தங்கத்திடம் சென்று "என்னம்மா நடக்குது பக்கத்தில் ஏன் கட்றாங்க" என்று கேட்டான் "என்னன்னு தெரியல டா அசோக் தான் அப்பாகிட்ட பக்கத்தில் கட்டிக்க போறேன் -ன்னு கேட்டான் அப்பாவும் சரி என்று சொல்லிட்டார் டா" என்று தனக்கு தெரிந்ததை ஒப்பித்தாள் தங்கம். 

"தனிக்குடித்தனம் போகப் போகிறானா?" என்று புரியாமல் கேட்டான் அசோக். "அதான் எனக்கும் தெரியலை. தனியாக போவதாக இருந்தால் எப்பவோ போயிருப்பான்" என்று குழம்பினாள் தங்கம்.

"அது சரி அவன்கிட்ட ஏதும்மா பணம்.மல்லிகாவிற்கே நிறைய செய்துவிட்டான்" என்று அக்கறையுடன் கேட்டான் மணி. "அசோக் அந்த சங்கவி சென்னை போய் வந்ததில் இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கா. என்னவோ உலகத்தையே சுற்றி வந்த மாதிரி நடந்துகறா" என்று அங்கலாய்த்தாள் தங்கம்.

 

இரவுதான் சென்னையில் இருந்து வந்தனர். மறுநாள் காலையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது ஒரு இரவுக்குள் செயல்களில் மாற்றத்தை கண்டு பிடித்து விட முடியுமா? அதான் பெண்களின் சாமர்த்தியம் ஐந்து நிமிட பேச்சு போதும் ஒருவரின் குணத்தை கண்டுபிடிக்க. என்ன அவர்கள் அறிந்ததில் எத்தனை சதவீதம் சரியாக இருக்கும் என்று தெரியாது. "சென்னையில் இருந்து வந்திருக்கும் அம்மா அசோக்கிற்கு பணம் கொடுத்திருப்பாங்களோ" என்று  யோசனையில் மூழ்கினான் மணி. மிக வேகமாக  சுவர் எழும்பியது. செங்கற்களால் கட்டப்பட்டு சிமெண்ட் தரை போட்டு மேலே மரச்சட்டம் வைத்து  அடித்து விடலாம் என்ற திட்டத்தில் கட்டிடம் எழும்பிக் கொண்டிருந்தது.

 

ரமா அம்மாவிற்கு சாப்பாடு தங்கம் எடுத்து வந்து கொடுத்தார். வீட்டில் இருப்பவர்கள் ரமா அம்மாவை மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் மனதில் எல்லாம் ரமா இன்னும் ஒரு வாரம் நம்ம வீட்டில் இருக்கப் போகிற விருந்தினர். அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் புவனா நாகம்மா உட்பட அனைவரும் கவனமாக நடந்து கொண்டனர்.

 

ஒரு மாலை வேளையில் தங்கம் ரமாவை அழைத்துக்கொண்டு வயல்வெளிக்கு சென்று அவர்கள் வயல் எல்லாம் சுற்றி காட்டினார்கள். அங்கு வேலை செய்யும் ஆட்களை வியப்புடன் பார்த்து ரசித்தார் ரமா. தண்ணீர் பாயும் இடத்தில் இருந்த மூக்கிரட்டை கீரையை பறித்து தங்கம் வீட்டிற்கு வந்ததும் அதில் சூப் வைத்து ரமாவிற்கு கொடுத்தாள். நீங்க நிறைய மாத்திரை எடுக்கறீங்க உங்க சிறுநீரகம் பாதிக்காமல் இருக்கும் இந்த கீரையை வாரத்திற்கு 3,4 முறை கூட எடுக்கலாம் என்று வலம்புரிஜான் மாதிரி பேசினார் தங்கம்.

 

பக்கத்தில் கட்டிய அந்த குடிலின் வேலைகள் முடிந்துவிட்டது. யாருக்கு அந்தக் குடில் என்று கேட்டால் ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மல்லிகாவை கவனிக்கும் முழு பொறுப்பும் சங்கவியிடம் எழுதப்படாத சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரம் உருண்டோடியது. ரமா அம்மா கிளம்பப் போகிறார்கள் என நினைத்து சங்கவி மனம் வருத்தப்பட்டது. ரமா வாழ்நாட்களில் மகிழ்வாக இருந்த நாட்கள் அசோக் வீட்டில் இருந்த இந்த ஒரு வாரம் தான். ரமா கிளம்புகிறேன் என்று கூறிவிட்டார்கள். மூட்டை முடிச்சு எல்லாம் கட்டியாச்சு பயணத்தில் அவர்கள் சாப்பிடுவதற்கு டிபன் எல்லாம் ரெடி பண்ணி கட்டி வைத்துவிட்டாள் சங்கவி. தங்கம் இன்னும் சிறிது நாட்கள் இருக்கலாமே என்று உள்ளன்போடு கூறினாள். "விருந்தும் மருந்தும் மூன்று வேளை" நான் ஒருவாரம் தங்கி விட்டேன் இந்த ஒரு வாரத்தின் நினைவு போதும் அடுத்த ஜென்மம் வரை என்னுடன் வரும் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தார். அசோக் ரமாவின் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான். எல்லாரையும் பார்த்து "ரயில் இந்த ஸ்டேஷனில் இருந்து கிளம்பி விட்டது அடுத்து எந்த ஸ்டேஷனில் நிற்கும் என்று எனக்கே தெரியாத ஒரு பயணம்" என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்து கையசைத்தாள்.

 

( சிறகுகள் படபடக்கும்)