Skip to main content

அம்மாவின் ரகசிய உறவை அறிந்த மகன் எடுத்த முடிவு - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 11

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Detective Malathi's Investigation: 11

 

துப்பறியும் நிபுணராக தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் விதவை தாயின் இன்னொரு பக்கத்தினை தெரிந்து கொண்டு ஷாக் ஆன உறவினர்களை பற்றியும் அவரது மகன் எடுத்த முடிவு பற்றியும் விளக்குகிறார்.

 

பெண் என்றால் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏற வேண்டும் என்கிற காலம் போய், தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானிக்கும் நிலை இன்று வந்துவிட்டது. தன் கணவருடைய சகோதரர் மனைவி குறித்து துப்பறிய வேண்டும் என்று ஒரு பெண் நம்மிடம் வந்தார். அந்தப் பெண்ணுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார். நாங்கள் விசாரிக்க ஆரம்பித்தோம். தினமும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று இன்னொரு வீட்டுக்குச் செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். தனியாகப் போராடி தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். மகன் வெளிநாடு சென்றான். 

 

அதன்பிறகு இன்னொருவருடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ முடிவு செய்தார். இந்தத் தொடர்பு குறித்து குடும்பத்தினரிடம் சொன்னபோது அவர்களுக்கு அதிர்ச்சி. கணவன் இறந்துவிட்டால் ஒரு பெண் தனியாகத்தான் வாழ வேண்டும் என்கிற மனநிலை சமுதாயத்தில் இன்றும் இருக்கிறது. இதைக் காரணம் காட்டி சொத்துக்களை குடும்பத்தினர் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கின்றனர். அந்தப் பெண் செய்ததில் தவறு எதுவும் இல்லை என்பதை குடும்பத்தினரிடம் நான் விளக்கினேன். 

 

குடும்பத்துக்கான கடமைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றியதால் அவருக்கும் சொத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்றேன். என்னுடைய கருத்தை ஏற்று அந்தப் பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப்பட்டது. தாயின் தொடர்பு குறித்து மகனுக்குத் தெரிந்தபோது தன் தாய் மகிழ்ச்சியாக வாழ்வதே தனக்கு முக்கியம் என்று மகன் முடிவெடுத்தான். இருவருக்கும் திருமணம் செய்து வைத்தான். இந்த முற்போக்கான முடிவை வரவேற்று நானும் திருமணத்தில் கலந்துகொண்டேன். இது போன்ற வித்தியாசமான வழக்குகளையும் நான் சந்தித்து இருக்கிறேன்.


 

Next Story

பெண்களை ஆசையாக பேச வைப்பது; சபலம் உள்ள ஆண்களிடம் ஆட்டையைப் போடுவது  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 42

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 detective-malathis-investigation-42

பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான  தகவல்களை வாங்கினோம்.

இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.

இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த  வங்கி  கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என  வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.

இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது