
சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவரைப் பிரிந்து தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் அந்த பெண் தனியார் நிறுவனம் ஒன்றியில் வேலைப் பார்த்து வருகிறார்.
இந்த பெண் இரவு நேரங்களில் தனது அம்மாவை துணைக்கு அழைத்துத் தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்காவின் வீட்டில் விட்டிருந்த நிலையில், அவர் அம்மாவின் துணையில்லாமல் அன்று இரவு தனியாக தூங்கியுள்ளார். அப்போது அந்த பெண் அதிகாலை பக்கத்தில் இளைஞர் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிடக் கத்தியால் முதுகு மற்றும் கைகளில் கிழித்துள்ளார். பின்னர் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு அந்த பெண் வெளியே ஓடிவர, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நொளம்பூர் போலீசார் சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வந்த நிலையில், சம்பவத்திற்குக் காரணமான முகேஷ்(26) என்ற இளைஞர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின்னர் நொளம்பூர் போலீசார் முகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ், அந்த பெண் வசிக்கும் குடியிருப்பில் தான் தங்கியுள்ளார். நீண்ட நாட்களாக அந்த பெண்ணின் மீது ஆசை கொண்ட அவர், எப்படியாவது அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார். அப்போதுதான் சம்பவத்தன்று வீட்டில் பெண் மற்றும் தனியாக தூக்குவதை அறிந்த முகேஷ், மது போதையில் அதிகாலை பெண்ணின் வீட்டிற்குள் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் கத்தியால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் முகேஷிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக தூங்கிய பெண்ணிற்கு இளைஞர் இருவர் பாலியல் தொந்தரவு அளித்து வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.