
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டம் பெரம்பூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி. 4வது மண்டலம், 37வது வார்டுக்குட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கடந்த 26ஆம் தேதி (26.05.2025 - திங்கட்கிழமை) அன்று மாலை சுமார் 05.00 மணி அளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு நிலையங்களான வ.உ.சி. நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, வன்னியம்பதி, பேசின் பிரிட்ஜ் எஸ்பிலனேடு மற்றும் கொளத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ அணைக்கப்பட்டது. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், மாநகராட்சி உயர் அலுவலர்கள், வருவாய்த்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட குடிசை பகுதிகளில் வசித்த மக்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள உதயசூரியன் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 27ஆம் தேதி (27.05.2025 - செவ்வாய்க்கிழமை) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்ட நபர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கு ரூபாய் 5000 ரொக்கம், 10 கிலோ அரிசி, துண்டு, லுங்கி, பக்கெட், மக், பாய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது மற்றும் சம்பவ நாள் முதல் சென்னை மாநகராட்சியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி இன்று (29.05.2025) வியாசர்பாடி, சென்னை மாநகராட்சி பள்ளியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ரூபாய் 8000 ரொக்கமும். 10 கிலோ அரிசி, வேஷ்டி, புடவையும் மற்றும் தி.மு. க. சார்பில் ரூபாய் 42000 ரொக்கமும், 26 கிலோ அரிசி, பெட்ஷீட். புடவை. லுங்கி. இரவு உடை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி .சேகர், மண்டலக் குழுத்தலைவர் நேதாஜியு.கணேசன், மாமன்ற உறுப்பினர் ஜெ. டில்லிபாபு, பெரம்பூர் வட்டாட்சியர் உமா மகேஷ்வரி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.