
தமிழ்நாடு பொதுச் சுகாதார இயக்குநரகம், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கொண்ட குழு நடத்திய விசாரணையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மை படுத்தாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி, திருப்பத்தூர் - வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த இந்திராணி, வரதன், சத்யா, நர்மதா, ஜெய்சிலி, ஆபிசூர், அனிதா, இளங்கோவன் உட்பட 10 பேரில் 8 அடுத்தடுத்து 6 மாத காலத்திற்குள் உயிரிழந்தனர்.
இதில் கடைசியாக உயிரிழந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம் குமார் என்பவர் தனது தாய்க்கு மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனை மருத்துவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மருத்துவமனை முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் பல் மருத்துவமனையின் முகப்பில் உள்ள ஷட்டரில் எனது தாய் உட்பட 8 பேர் இவரது தவறான சிகிச்சையில் உயிரிழந்ததாக பெயர் பட்டியலை எழுதி ஒட்டி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அந்த இளைஞரை காவல்துறையினர் அடுத்தடுத்து 2 முறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னும், ‘எனது தாய்க்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்...’ என்று நகர காவல் நிலையம், மாவட்ட மருத்துவ இனை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் வரை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இளைஞர் ஸ்ரீராம்குமார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் 2023-ல் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் இருந்து மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 பேர் இறந்ததாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம் குமார் தனது தாய் இறப்புக்கு காரணமான பல் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி தன்னுடைய தாய்க்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் ஏற்படக் கூடாது, மேலும் அறிவரசன் பல் மருத்துவமனைக்கு சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் நோய் தொற்று ஏற்பாடு 8 பேர் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.