Skip to main content

ஓ.பி.எஸ். பதவியை கொடுத்தாலும் கூட இ.பி.எஸ். பக்கம் போகமாட்டேன் : தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
Thanga Tamil Selvan


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

இந்த நிலையில் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான ஆண்டிப்ட்டி தொகுதியில் உள்ள என்.டி.பட்டிக்கு வந்த தங்கத்தமிழ்ச்செல்வனோ தனது தீவிர ஆதரவாளரான திருமலாபுரத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் திண்டுக்கல் அ.தி.மு.க. பிரமுகரும், தொழிலதிபருமான மாயாண்டித் தேவர் தம்பதிகளின் மணமக்களான கணேஷ்குமார், சுகன்யாவின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த தங்கத்தமிழ்செல்வனிடம் ஒரு மினி பேட்டியை தொடர்ந்தோம்.
 

நக்கீரன் : ஒன்பது மாதங்களுக்கு பிறகு திடீரென வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்திருக்கிறீர்களே?

 

 

 

தங்கத்தமிழ்ச்செல்வன்: ஐகோர்ட் மேல எனக்கு இனி துளி அளவு கூட நம்பிக்கை இல்லை. இப்படியே தொடர்ந்து இன்னும் மூன்று வருடத்திற்கு இழுத்தடிப்பார்கள். அதனால்தான் நான் மட்டும் வாபஸ் வாங்குவதற்காக துணைப்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சட்ட ஆலோசகருடன் ஆலோசனை செய்து வருகிறோம். அதன் மூலம் சபாநாயகர் அறிவித்தபடி தொகுதியும் காலியாகிவிடும். அதன்மூலம் இடைத்தேர்தலும் நடக்கும் 
 

நக்கீரன் : அப்படி இடைத்தேர்தல் நடந்தால் நீங்கள் மீண்டும் போட்டி போடுவீர்களா?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: சின்னம்மா துணைப் பொதுச்செயலாளர் டிடிவி ஆசியோடு மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை கூடுதலாக வாங்கிய 31ஆயிரம் ஓட்டுக்களை விட இந்த முறை வாங்குவேன்.
 

நக்கீரன் : இது ஓ.பி.எஸ்.-ன் சொந்த மாவட்டம் அதோடு ஆளுங்கட்சியின் அதிகாரம் பணபலம் இருக்கும்போது நீங்கள் எப்படி பெற்றி பெற முடியும்?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  வெற்றி பெற்றார். அங்கேயும் அதிகாரம், பணபலம் எல்லாம் இருந்தது அதையெல்லாம் முறியடித்துத்தானே வெற்றி பெற்றார். 
 

நக்கீரன் : ஆர்.கே. நகரில் 20 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்துதானே டிடிவி வெற்றி பெற்றார்?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: அதெல்லாம் கிடையாது டிடிவி மேல் நம்பிக்கை வைத்துதான் ஆர்.கே. மக்கள் துணைப் பொதுச் செயலாளரை வெற்றி பெற வைத்தனர்.
 

நக்கீரன் : ஆனால் உங்களை இ.பி.எஸ். அணியினர் இழுத்து மந்திரி பதவி கொடுக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே?

 

 

 

தங்கத்தமிழ்ச்செல்வன்: சின்னம்மாவிற்கு எதிராக ஓ.பி.எஸ். பிரிந்து அதன்மூலம் எங்க சின்னம்மா ஆசியோடு முதல்வரான இந்த எடப்பாடி எனக்குத்தான் மந்திரி பதவி கொடுப்பதாக கூறியவர் கடைசியில் செங்கோடையனுக்கு கொடுத்துவிட்டார். அப்போதே நான் வெளிவந்திருக்கணும். இனிமேலேயா மந்திரி பதவிக்கு போக போகிறேன். ஓ.பி.எஸ். இடம் இருக்கும் துணை முதல்வர் பதவியை கொடுத்தால் கூட இபி.எஸ். பக்கம் போக மாட்டேன். 
 

நக்கீரன் :  தற்போது உங்கள் அணியில் உள்ள 21 எம்.எல்.ஏ.க்களின் 8 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் அணிக்கு தாவ போவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: எங்க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி அணியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.வை கூட இபிஎஸ் அணியினர் இழுக்க முடியாது. அப்படி ஒரு பொய்யான தகவல்களை பத்திரிக்கைகள் தான் பரப்பி வருகிறது. 
 

நக்கீரன் : ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.வும் மனம் திருந்தி வந்தததால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருக்கறாரே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன் : துணை சபாநாயகராக அவரை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும். கட்சி தாவல் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மனம் திருந்தியதால் ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அவர் என்ன கடவுளா? பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 

நக்கீரன் : டிடிவி தினகரன் தான் வழக்கை வாபஸ் வாங்க சொல்லியிருப்பதாக பேசப்பட்டு வருகிறதே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: அப்படியெல்லாம் கிடையாது இத்தொகுதியில் பத்து வருடமாக அம்மா எம்.எல்.ஏ.வாக இருந்தபோது நான் தான் தொகுதி பொறுப்பாளராக இருந்தேன். அதுபோல் கடந்த முறையும், இந்த முறையும் எம்.எல்ஏ.வாக இருந்து கொண்டு குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து வருகிறேன். அதனால்தான் என் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும் என்ற நோக்கத்தில் கேசை வாபஸ் வாங்க நினைக்கிறேனே தவிர பொதுச் செயலாளர் எல்லாம் கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை.
 

 

சார்ந்த செய்திகள்