
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் படித்த பல ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியைத் தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளியாக மாற்றி தரம் உயர்த்தி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 58% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே கடைசி இடத்திற்குச் சென்றது. இதில் 107 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர். இதேபோன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 107 மாணவர்களில் 36 மாணவர்கள் தோல்வியடைந்து 66% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 59% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 99 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்து மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறந்தாங்கி வர்த்தக சங்கம், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அரசு மாதிரிப் பள்ளி பொதுத் தேர்வில் மோசமான இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் அறந்தாங்கி நகரத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியர் பாட ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்கள் மாணவர்கள் சரியில்லை, பள்ளிக்கு வருவதில்லை, நாங்க சொல்றதை கேட்பதில்லை என்று மாணவர்கள் மீதும் குற்றம்சாட்டினர். மேலும் ஜூன் மாதம் நடக்கும் துணைத் தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதாக உறுதி கூறியுள்ளனர்.
ஆனால், “ஆசிரியர்கள் சொன்ன காரணங்களை ஏற்க முடியவில்லை. அறந்தாங்கி பெயரையே கெடுத்துட்டீங்க. ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது எவ்வளவு பெரிய விசயம். இதை ஏன் எஸ்.எம்.சி, பி.டி.ஏ, கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர முயற்ச்சிக்கவில்லை மேலும், இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியிலேயே ஜாதிய பிரச்சனைகள் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் மாணவர்களை கண்டுகொள்ளவில்லை...” என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் பேசினர். இனி வரும் காலங்களில் இப்படி நடக்காமல் பார்க்க வேண்டும் என்று கூறிச் சென்றனர்.
இந்த நிலையில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பள்ளிக்குச் சென்று அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயந்தி, தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்களிடம், “தேர்வு முடிவுகள் ஏன் இப்படி மோசமானது என்று கேட்க வழக்கம் போல் மாணவர்கள் சரியில்லை..” என்ற பதிலையே கூறியுள்ளனர்.
அப்போது, பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், “நீங்கள் சொல்லும் காரணங்களை ஏற்கமுடியாது. அறந்தாங்கி மாடல் ஸ்கூல் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கடைசி இடத்திற்கு வருதுன்னா எப்படி ஏற்க முடியும். மாணவர்களை குறை சொல்றதை நிறுத்திட்டு அவர்களை மாற்ற வேண்டும் அது தான் மாதிரிப்பள்ளி. சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறைந்தது 90% தேர்ச்சியை கொடுக்கிறார்கள். மாடல் பள்ளியின் மாடலே வேற மாதிரி இருக்கு. வெளியே சொல்ல முடியல. இனி வரும் காலங்களில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் தயாராக வேண்டும்..” என்றார் வேதனையோடு.
இது குறித்து அப்பள்ளியின் பெற்றோர்கள் நம்மிடம், “கடந்த ஆண்டு பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்பா பள்ளியில் குப்பை குவியல், உடைந்து கிடந்த மேஜைகள் என அவலட்சணத்தைப் பார்த்து பயங்கர கோபமாகி தலைமை ஆசிரியரை கடிந்து கொண்டார். உள்கட்டமைப்பு மட்டுமல்ல மாணவர்களின் வாசிப்புத் திறனும் மோசமாக இருப்பதைப் பார்த்து எல்லாத்தையும் மாற்றுங்கள் என்று எச்சரித்துச் சென்றார். ஆனால் அதை இந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை. பக்கத்திலேயே இருக்கும் மாவட்ட கல்வி அலுவலரும் கண்டுகொள்ளவில்லை. அதன் பலன் தான் இன்று அறந்தாங்கி மாதிரிப் பள்ளி தலைகுனிந்து நிற்கிறது” என்றனர்.
இதனைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் இது போல நடக்கக் கூடாது என்பதற்காக மாவட்ட கல்வி நிர்வாகம் பல்வேறு விசாரணை, ஆய்வுகள் மேற்கொண்டதில் பள்ளியில் மாணவர் நலனுக்கு எதிராக செயல்பட்ட சில ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு முதல்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில், தொழிற்கல்வி ஆசிரியர்(விவசாயம்) ஸ்ரீரஞ்சித்குமார் மது போதையில் பள்ளிக்கு வராமலும், பாடம் நடத்தாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டதாக முதுநிலை ஆசிரியர்கள் 3 பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் என 7ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஸ்ரீரஞ்சித்குமார்
அதாவது, முதுநிலை ஆசிரியர்கள் மு.சி.பாஸ்கர் (வேதியியல்) கட்டுமாவடி, அந்தோணி ராஜ் (வரலாறு) வெண்ணாவல்குடி, பாலச்சந்தர் (வணிகவியல்) அத்தாணி, பட்டதாரி ஆசிரியர்கள் இளையராஜா (கணிதம்) கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மூர்த்தி (அறிவியல்) நெடுவாசல், ரவி (கணிதம்) கிருஷ்ணாசிப்பட்டினம், ஜெரோம் (கணிதம்) சுப்பிரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என 7 ஆசிரியர்களையும் பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆசிரியர்களுக்கு முன்மாதியாகவும், பாடமாகவும் அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் தேர்ச்சி விகிதம் குறைவாக கொடுத்துள்ள பல பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.