
அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாக இந்த அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு சேர்வதற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் காலையில் தூங்கி எழுந்த சிறுமி அரசு சேவை இல்லத்தில் இருந்து வெளியில் வந்த போது மர்ம நபர் ஒருவர் முகத்தை துணியால் மறைத்தபடி சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மாணவி பலமாக தாக்கப்பட்டார். மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். மற்ற மாணவிகள் அனைவரும் சேர்ந்து மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அரசு சேவை இல்லத்தின் காவலாளி மேத்யூ என்பவர் உள்ளே புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி சேவை இல்லத்திற்கு புதியவர் என்பதால் வெளியே சொல்லமாட்டார் என முகத்தை மூடிக்கொண்டு பாலியல் கொடுமை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைதுசெய்யப்பட்ட காவலாளி மேத்யூவின் தாய் அதே சேவை மையத்தில் வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் காவலாளி பணிக்கு நியமிக்கப்பட்ட மேத்யூ இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''பெரிய காம்பவுண்ட், தனியாக கேட் என பாதுகாப்பான இடம் தான். யாரும் உள்ள போக முடியாது. இந்த நிகழ்வு அங்கு பணிபுரியும் அரசு பொறுப்பில் இருக்கக் கூடிய ஊழியராலேயே நடைபெற்றிருக்கிறது என சொல்லும் பொழுது மிக துரதிஷ்டவசமானது. அதனால்தான் அடுத்த முடிவு எடுத்திருக்கிறோம். இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்களின் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். தமிழக முதல்வர் அறிவுறுத்தல் படி அடுத்த கட்டமாக பெண்களுக்கான எல்லா இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறோம். இந்த சம்பவம் நடந்த பொழுது அரசு சேவை மையத்தின் வார்டன் விடுமுறையில் இருந்துள்ளார். அங்குள்ள ஒவ்வொரு மாணவிகளிடமும் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரித்த பொழுது எந்த ஒரு மாணவியும் காவலாளியை பற்றி எந்த ஒரு புகாரும் சொல்லவில்லை. அதுதான் எங்களுக்கும் சந்தேகமாக இருக்கிறது'' என்றார்.