
தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்து 5,364 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 221 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளது. அதில், முழு கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் பாதுகாப்பிற்காக முககவசம் அணிவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு அதிக காய்ச்சல், இருமல், உடல் சோர்வு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதேபோல் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொரோனா பரவல் காரணமாக முககவசம் அணிய வேண்டும். கர்ப்பிணிகள் மட்டுமல்லாது முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது' என்று அறிவுறுத்தலை பொதுசுகாதாரத் துறை கொடுத்துள்ளது.