
ஆஸ்திரேலியா நாட்டுப் பறவைகளில் ஒன்று ஈமு கோழி. இதனை வளர்த்தால் அதிக அளவு லாபம் பெறலாம் எனக் கூறி ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவிலான மோசடி நடைபெற்றது. இதனை நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இதில் முதலீடு செய்திருந்தனர்.
அதன்படி சுமார் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து முதலீட்டைப் சுசி ஈமூ கோழி உரிமையாளர் குருசாமி என்பவர் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் முதலீட்டுப் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றது. மேலும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாகத் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 385 பேர் பேரிடம் ஈமு கோழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் மீட்டலாம் எனக் கூறி பணம் மோசடி செய்த வழக்கு வழக்கும் அடங்கும்.
அதன்படி இந்த வழக்கு கோவையில் உள்ள முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த சூழலில் பல்வேறு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (06.06.2025) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 கோடியே 89 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.