Skip to main content

பானை சின்னத்தை உடைத்ததன் மூலம் பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 

பானை சின்னத்தை உடைத்ததன் மூலம் பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:   ’’அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்  20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல- ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றவும் அதிமுக கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத் தவறி- சட்டம் ஒழுங்கிற்கும்- பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

p

 

“வீடுகளை உடைக்கும்” கேடான பழக்கத்திற்கு மீண்டும் தூபம் போட்டு ஒரு சில சக்திகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில்  கலவரம்  ஏற்படுத்தியதை காவல்துறை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது அப்பட்டமான சுயநலம் மட்டுமின்றி- தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி. இந்தப்  போக்கை சம்பந்தப்பட்ட சுயநல சக்திகள் கைவிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இது போன்ற மனப்பான்மை கொண்டோரின் சதித்திட்டங்களை  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

 

தேர்தல் நாளன்று ஆம்பூர் பகுதியில் வாக்குசாவடியைக் கைப்பற்ற  முயற்சி நடைபெற்று- துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கிறது. தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நத்தமேடு வாக்குச்சாவடியில் “நான் 6 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏழு வாக்குகள்  போட்டேன். நீ எத்தனை வாக்குகள் போட்டாய்?” என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கிற அளவிற்கு ஒரு வாக்குச்சாவடியையே கைப்பற்றி வாக்களித்த கொடுமையை இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அந்த நிகழ்வை காவல்துறை அனுமதித்தது- வாக்குச்சாவடியை கைப்பற்ற  காவல்துறையே உடந்தையாக இருந்த அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது.  தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிப் பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு- அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பரவலாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

இப்படியொரு அசாதாரண சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவும், தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் பலரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நடத்தியதன் விளைவுதான் இன்றைக்கு ஆங்காங்கே காவல்துறையின் அலட்சியத்தால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

 

நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் தேர்தல் டி.ஜி.பி.யின்  கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் உள்ள மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்ற நியாயமான கேள்வியே எழுந்துள்ளது. ஆகவே சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல்- சமூக நல்லிணக்கத்திற்குச் சிறிதும்  பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி- பொது அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் சகோதரமனப்பான்மையுடன் சுமுகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கிட வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்