Skip to main content

"எல்லாம் போச்சு... எங்களுக்கு பொங்கலே இல்லை!" - வேதனையில் விருதுநகர் விவசாயிகள் 

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா தைப்பொங்கல். உழவர்கள், உழைக்கும் மக்களின் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் உழவுக்குத் துணை செய்யும் மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் விதமாக இவ்விழா  கொண்டாடப்படுகிறது.

 

ஆடிப்பட்டம் தேடி விதைத்து, விதைத்ததை அறுவடை செய்து பயன் அடையும் மாதம் தை மாதம் ஆகும். அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, நெய் கலந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வது வழக்கம். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளம் இல்லா இடங்களில் மழை நீரைப் பயன்படுத்தி ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். அதுவும் தைமாதத்தில்தான் அறுவடை செய்யப்படும்.

 

பொங்கல் கொண்டாடுவதன் பின்னுள்ள நோக்கமும் முழுமையான பழக்கமும் தெரியாதவர்கள் கூட நம் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாடி வருகின்றனர்.

 

கடந்த வருடம் முழுவதும் நாடே கரோனாவினால் வீட்டிலே முடங்கி இருந்தபோதும் தொடர்ந்து விருப்பத்துடன் வெளியே வந்து உழைத்தவர்களுள் விவசாயிகள் மிக முக்கியமானவர்கள். கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்து ஊக்கமாகப் புத்தாண்டு, பொங்கல் என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் சமீபமாகத் தொடர்ந்து விடாமல் மழை பெய்த காரணத்தால் தமிழகத்தில் பல விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அவர்கள் கொண்டாட வேண்டிய இந்தத்  திருவிழா அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் பாதிப்பு அடைந்த போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் செவல்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த ஊர் மக்களிடம் இதுகுறித்து பேசியபோது, "மற்ற இடங்களில் மூன்று போகம் விளைச்சல் செய்கிற நிலையில், விருதுநகர் போன்ற வறண்ட பூமியில் ஒரு போகம் விளைந்தாலே அரிது. காரணம் நாங்கள் முழுவதுமாய் மழையை நம்பியே விளைவிக்கிறோம். அப்படி விளைந்த மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய இந்த மாதத்தில் அளவுக்கு மீறிய கடும் மழையால் அனைத்து பயிர்களும் அழுகி எதற்கும் உபயோகம் ஆகாத நிலை உருவாகிவிட்டது.

 

இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட நிலம் 300 ஏக்கருக்கும் மேலாக இருக்கும். இதனால் வருடத்திற்கு ஒரு முறைமட்டுமே விவசாயம் செய்து வாழ்ந்து வரும் எங்க ஊர் மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கு. எல்லாம் போச்சு... எங்களுக்குப் பொங்கலே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்கு உரிய உதவியையும் நிவாரணத்தையும் அரசு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.