
திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்ற இந்திராணி, வரதன், சத்யா, நர்மதா, ஜெய்சிலி, ஆபிசூர் ரகுமான், அனிதா, இளங்கோவன் உட்பட 10 பேரில் 8 ,பேர் அடுத்தடுத்து 6 மாத காலத்திற்குள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் இருந்து மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 பேர் இறந்ததாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியானது. இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணைய இயக்குனர் ஞானமீனாட்சி நேரில் விசாரணை மேற்கண்டார்.
இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரமையா முன்னிலையில் மாவட்ட சுகாதார இனை இயக்குனர் ஞானமீனாட்சி தனியார் பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி கூறியதாவது:- நாங்கள் சம்பந்தப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு விளக்கம் கேட்டு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியிருந்தோம். அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அதனால் சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். மேலும் இது குறித்து எங்கள் உயர் அதிகாரி மற்றும் பல் மருத்துவ அசோசியேஷன் ஆகியோரிடம் இது சம்பந்தமாக புகார் அளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.