
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (02.06.2025) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பே பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து குடிநீர்த் தொட்டிகளையும் சுத்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் இன்று தான் வகுப்பறை சுத்தமே நடந்தது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் பச்சலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளை விடுமுறை நாளில் சுத்தம் செய்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து உலர வைத்திருந்தார். இன்று பள்ளி திறக்கப்படும் முன்பே தண்ணீர் ஏற்றுவதற்கு முன்னதாக தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்துக் கழுவி விட்ட பிறகு குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஜோதிமணி நம்மிடம் பேசுகையில், “பல நாட்கள் பயன்படுத்தாத தண்ணீர் தொட்டியை அப்போதே கழுவி காய வைத்திருந்தோம். இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதால் மீண்டும் பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்து குடிநீர் ஏற்றியுள்ளோம். மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர்த் தேவை” என்றார். தலைமையாசிரியர் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களின் மாணவர்கள் மீதான அக்கறையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.