Skip to main content

“2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Madurai Branch of the High Court order Prohibition on collecting tolls at 2 toll booths

மதுரை - தூத்துக்குடி இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின்படி தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்க வேண்டும். அதன்படி நெடுஞ்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஒப்பந்ததாரர் திட்டமிடப்பட்ட நிதியைக் காட்டிலும் அதிகமாக நிதி வசூல் செய்து ஒப்பந்தத்தை மீறியுள்ளார். அதோடு ஒப்பந்தத்தின்படி சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடவில்லை.

மேலும் சாலை பராமரிப்பு செய்யவில்லை. அதன் பிறகு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்படாமல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதோடு சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்படவில்லை. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படவில்லை எனவே இந்த சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியம் கிலீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (03.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், ஒப்பந்தப்படி உரிய வகையில் சுங்க கட்டணம் வசூலிக்காமல், சாலைகளைப் பராமரிக்காமல் இருப்பது சட்ட விரோதம் ஆகும். இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே தூத்துக்குடி - மதுரை இடையே சென்று வரக் கூடிய வாகனங்களுக்கு 2 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்