
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞருமான வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கோடைக்கால விடுமுறை நீதிமன்றத்தில் அவசர வழக்காக நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “தமிழக அரசினுடைய சட்டங்களுக்குத் தடைகோரிய மனுவுக்குப் பதிலளிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும். சட்டங்களுக்கு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே போதிய கால அவகாசம் வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அவருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. மேலும் தடைகோரிய வழக்கில் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அரசினுடைய கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அதே சமயம் தமிழக உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானிய குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனால் இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த ஒரு அவசியமும், முகாந்திரமும் இல்லை. அதுமட்டுமல்லமாலல் மனுதாரர் பா.ஜ.க.வைச் சேர்ந்த சேர்ந்தவர். அவர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த தடை வழக்கிற்கு உரியப் பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது நியாயமற்றது அநீதியானது. வானம் இடிந்து விழாது” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் இரு தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், “இந்த வழக்கு விசாரணை ஒரு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்யக் கால அவகாசமும் தரப்படவில்லை. மேலும் இது தொடர்பான இந்த வழக்கை மாற்றக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். இரு நீதிபதிகள் பிறபித்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.