Skip to main content

’’போங்கடா.. நீங்களும், உங்க மாவட்ட நிர்வாகமும்..” -விருதுநகரில் கொந்தளித்த விவசாயிகள்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
aar

 

கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்று கூறிய மகாத்மா காந்தியின் படத்தை அத்தனை அரசு அலுவலகங்களிலும் வைத்திருக்கிறார்கள். விவசாயம் சார்ந்ததாக கிராமங்கள் இருந்ததால்தான், மகாத்மாவின் கருத்து அப்படி இருந்திருக்கிறது. அவரது கொள்கைக்கு – கிராமங்களுக்கு – விவசாயத்துக்கு – விவசாயிகளுக்கு,  அரசு அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா என்று பார்த்தால், உதட்டைத்தான் பிதுக்க வேண்டியதிருக்கிறது.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்,   விவசாயிகளை ஒரு பொருட்டாகக் கருதாததால், அவர்கள் கொந்தளித்த சம்பவம் இன்று விருதுநகரில் நடந்தது.    

 

salai

 

2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு, இழப்பீடு தொகையை, இதுவரை வழங்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழ் விவசாயிகள் சங்கம். இதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனு கொடுப்பதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களைக் காத்திருக்கச் சொன்ன ஆட்சியரின் தனி உதவியாளர், ஆட்சியர் சிவஞானத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்திருக்கும் விபரத்தைக் கூறியிருக்கிறார்.  ‘இன்று விவசாயிகளைச் சந்திப்பதற்கு நேரம் இல்லை’ என்று சிவஞானம் கூறிவிட, விவசாயிகளை வெளியேறச் சொன்னார் அந்தத் தனி உதவியாளர். 

 

ias

 

ஆட்சியர், தங்களை அலட்சியம் செய்து, அவமானப்படுத்தியதால் வெகுண்ட விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி,   சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து,  சாலை மறியலைக் கைவிட்டு, மனு கொடுப்பதற்கு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் நுழைந்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு,  மெயின் கேட்டைப் பூட்டியிருந்தனர். தங்களுக்கு எதிரான மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாட்டை அறிந்த விவசாயிகள், “போங்கடா.. நீங்களும் உங்க மாவட்ட நிர்வாகமும்” என்று வெறுத்துப்போய் கோஷமிட்டு,  கோரிக்கை மனுவை அங்கேயே கிழித்தெறிந்தனர். 

 

விருதுநகர் மாவட்ட நிர்வாகம்  மட்டுமல்ல,  பாரதப் பிரதமரே, அட,  இந்திய தேசமே, விவசாயிகளின் கண்ணீருக்கும், போராட்டத்துக்கும் மதிப்பளிக்காததால் -  உரிய கவனம் செலுத்தாததால் -  அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருக்கிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.