
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அருகே உள்ளது கருமந்துறை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண்டி - கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி மூன்று மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். டெய்லர் வேலை பார்த்து வந்த ஆண்டி தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதற்காக கடுமையாக உழைத்து வந்திருக்கிறார்.ஆனால் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஆண்டி உயிரிழக்க பட்டதாரியான அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தை தொழிலான டெய்லர் வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கருமந்துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இளைய மகள் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளார். பின்பு படிப்பை வைத்து வாழ்கையில் சாதித்து அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய ராஜேஸ்வரிக்கு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக கடின உழைப்பைச் சிந்திய ராஜேஸ்வரி பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து ஜே இ.இ தேர்வு எழுதியுள்ளார். அதில் அகில இந்திய அளவில் 417வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ராஜேஸ்வரிக்கு சென்னை ஐஐடியில் பயிலுவதற்கு இடம் கிடைத்துள்ளது.
இந்த தொடர் உழைப்பின் பலனாக தமிழகத்தில் பழங்குடியின சமூகத்தில் இருந்து சென்னை ஐஐடிக்கு படிக்கச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகலும் வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.