
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இரு தரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று (28.05.2025) அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என தீர்ப்பை வாசித்தார். மேலும்,“தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதே சமயம் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், “ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சுமத்தப்பட்டன. இந்த 11 குற்றங்களையும் அவர் மீது அரசு தரப்பு நிரூபித்து, சாட்சியங்கள், ஆவண சாட்சியங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சாட்சியங்கள் எல்லாவற்றிலும் நிரூபிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் இன்றைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தண்டனை விவரங்கள் என்ன என்பது குறித்து வரும் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் இன்றைக்குக் கூறியுள்ளது.
இன்றைக்கு நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்றால் ஞானசேகரன் தனக்கான தண்டனை விவரத்தைத் தெரிவித்ததும் அது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஞானசேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஞானசேகரன், “தண்டனையைக் குறைக்க வேண்டும். நான்தான் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் (Breadwinner of the Family)” எனத் தெரிவித்தார். அதற்கு அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதோடு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு அதற்கான தீர்ப்பையும் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி கொடுத்திருக்கிறோம். மற்றபடி தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் அன்றைக்குத் தெரியவரும். தண்டனை விவரம் தெரிய வரும் வரையில் வழக்கினுடைய தன்மை, வழக்கினுடைய மற்ற விவரங்களைப் பற்றி இன்றைக்குச் சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.