
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூர் ஊராட்சி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரபாவதி (வயது 33). பாஸ்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு கோகுல் (வயது 9) என்ற மகனும், மித்ரா (வயது 6) என்கிற மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபாவதி கடந்த 7ஆம் அவரது தயார் தனலட்சுமியிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் தனலட்சுமி, பிரபாவதிக்கு போன் செய்தார் அப்பொழுது போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. மேலும் பிரபாவதி குறித்து இந்த தகவலும் கிடைவில்லை.
இந்நிலையில் தனலட்சுமி கடந்த 8ஆம் தேதி மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வடக்கு வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சம்பத் (வயது33) என்பவருடன் பிரபாவதிக்கு கூடா நட்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நேற்று போலீஸார் சம்பத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த 7ஆம் தேதி பிரபாவதியை சம்பத் அவரது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு அழைத்து சென்றுட்டு திருப்பி இரவு 7 மணி அளவில் வடக்கு வெள்ளூர் அருந்தியார் காலனி அருகே வந்து கொண்டிருந்த போது பிரபாவதிக்கும், சம்பத்துக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் இது கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்பொழுது சம்பத் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே கிடந்த கட்டையால் பிரபாவதி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பிரபாவதி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அப்பொழுது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பிரபாவதியை இழுத்து சென்று என்.எல்.சி. 1வது சுரங்க பகுதியில் உள்ள மண் மேட்டில் இருந்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளார் என்று தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெய்வேலி டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த பிரபாவதி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர்.