Skip to main content

'குடிசையில் தங்கியிருந்த காதல் ஜோடி மரணம்'-கதறித் துடித்த பெண்ணின் தாய்

Published on 04/06/2025 | Edited on 04/06/2025
Couple staying in hut lose their live  -Police investigation

விழுப்புரத்தை சேர்ந்த காதல் ஜோடி சென்னையில் கணவன் மனைவி என சொல்லி வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். இவர் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி பயின்று வந்த நிலையில் அதே கல்லூரியில் பிஏ ஆங்கிலம் பயின்று வந்த அபிநயா என்ற மாணவியை ஆகாஷ் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செமஸ்டர் விடுமுறையில் சென்னையில் வேலைக்கு செல்வதாக இருவரும் தனித்தனியாக அவர்களுடைய வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு சென்னை வந்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில் 4000 ரூபாய் அட்வான்ஸ் செலுத்தி 1,400 ரூபாய் வாடகையில் குடிசை வீடு ஒன்றில் தங்கியுள்ளனர். தங்களை ஏற்கனவே திருமணம் ஆன ஜோடி என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருவரும் வீட்டுக்குள்ளேயே இருந்த நிலையில் திடீரென பகல் நேரத்தில் வீட்டிற்குள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட சத்தம் கேட்டதாக அக்கமபக்கத்தினரால் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து சத்தம் நின்று போனது. பல மணி நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று குடிசைக்குள் சென்று டார்ச் லைட் அடித்து பார்த்தபோது இளைஞர் ஆகாஷ் தூக்கிட்ட நிலையிலும், அபிநயா முகம் முழுவதும் தாக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடனும் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஐசிஎப் காவல் நிலையத்திற்கு புகாரளித்த நிலையில் அங்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பெண்ணின் தாயார் 'வேலைக்கு போவதாக கூறிவிட்டு சென்ற மகள் இப்படி செய்வாள் என கனவில் கூட நினைக்கவில்லை' என கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த குடிசை வீட்டுக்குள் இரத்தம் படித்த செங்கல்லை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வாக்குவாதத்தில் ஆகாஷ் செங்கல்லை கொண்டு அபிநயாவை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வரும் நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்