
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த திட்டத்திற்கு பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் போராட்டங்களை சீர் செய்யும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள் இறங்கியுள்ளது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட இருப்பதாகவும், பரந்தூர் பசுமைவழி விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டச் செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.